70 வயது முதியவர் கொடூர கொலை.. துண்டு பேப்பரால் சிக்கிய கொலையாளிகள்.. எப்படி?
சிவ நாராயணின் உடலை போலீசார் கைப்பற்றிய நிலையில் அதன் அருகில் ஒரு சிறிய, கிழிந்த காகித துண்டை கண்டறிந்தனர். அதில் பல பெயர்கள் மங்கலாகவும், கிட்டத்தட்ட அர்த்தமற்றதாகவும் இருந்தன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட 70 வயது முதியவரின் வழக்கில் கொலையாளிகள் சிக்கியுள்ளனர். எப்படி என்பது பற்றிக் காணலாம்.
மத்தியப் பிரதேசத்தின் கங்கேபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவ நாராயணன் கௌரவ். 70 வயதான அவரது உடல் அவரது வயலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நேரில் கண்ட சாட்சிகள் இல்லாததால் சந்தேக நபர்கள் யார் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆனால் தற்போது நாராயணன் கௌரவ் கொலை வழக்கில் போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் நாராயணன் கௌரவின் மருமகன் சிவரதன் கவுரவ், அவரது பேரன் மகேந்திர கவுரவ் மற்றும் கிராமவாசி பாதம் சிங் ஆகிய மூன்று பேர் ஆவார்கள். அவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது. மேலும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கோடாரி மற்றும் இரும்பு கம்பியும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடந்தது என்ன?
31 ஏக்கர் பரம்பரை நிலத்துக்கான சொத்து தகராறில் தான் இந்த கொலை நடந்துள்ளது. அதாவது சிவ நாராயணன் கௌரவ் சகோதரி சுர்ஜா தேவி இறந்த பிறகு அவரது கணவர் ராம்ஸ்வரூப் கௌதம், தனது மனைவி சொத்தின் பங்கை தருமாறு கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதற்கு சிவ நாராயணனும் சம்மத்திருக்கிறார்.
இதற்கிடையில் அவரின் மருமகன் சிவரதனும் பேரன் மகேந்திராவும் அந்த நிலத்தை ஆக்கிரமித்த நிலையில், தங்களுக்கு எதிராக சிவ நாராயணன் நீதிமன்றத்தில் பங்கை தர ஒப்புக்கொண்டதாக ஆத்திரமடைந்தனர். இதனால் பாதம் சிங்கின் உதவியுடன் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி நவம்பர் 15ம் தேதி நள்ளிரவு வழக்கம்போல சிவ நாராயணன் தனது வயிலில் காவலுக்கு இருக்கும்போது தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கோடரியால் அவரின் தொண்டையில் குத்தி கொடூரமாக கொன்றுள்ளனர். மறுநாள் காலையில் தான் சிவ நாராயணன் கௌரவ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
அவரது உடலை போலீசார் கைப்பற்றிய நிலையில் அதன் அருகில் ஒரு சிறிய, கிழிந்த காகித துண்டை கண்டறிந்தனர். அதில் பல பெயர்கள் மங்கலாகவும், கிட்டத்தட்ட அர்த்தமற்றதாகவும் இருந்தன. அதனை தடவியலாளர்கள் பாதுகாத்தனர். இதற்கிடையில் 2 மாத விசாரணையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், போலீசாருக்கு அந்த கிழிந்த காகித துண்டு நியாபகம் வந்தது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அந்த காகிதங்கள் மோப்பம் பிடிக்கப்பட்டது. ஆனால் அந்த நாய் வாசனையை நுகர்ந்து நேராக பாதம் சிங்கின் வீட்டு வாசலில் போய் நின்றது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். ஆனால் அவர் போலீசார் முதலில் திசை திருப்ப முயன்ற நிலையில் ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக் கொண்டார். மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.





















