Accident: கொடூரம்.. 7 குழந்தைகள், 4 பெண்கள் என 11 பேர் பலி - கோயிலுக்கு சென்று திரும்பியபோது கோர விபத்து
Road Accident: ராஜஸ்தானில் கோயிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களின் வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Road Accident: ராஜஸ்தானில் கோயிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களின் வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி:
ராஜஸ்தானில் உள்ள காது ஷியாம் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு வீடு திரும்பும் போது நடந்த சாலை விபத்தில் ஏழு குழந்தைகள் உட்பட 10 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களின் பிக்அப் வேன் ஒரு லாரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்த விவரங்களை அளித்த தௌசா மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார், "பாபி அருகே நடந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்... பயணிகள் பிக்-அப் லாரிக்கும் டிரெய்லர் லாரிக்கும் இடையே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது" என விளக்கமளித்தார். இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 முதல் 7 மட்டுமே இருக்கு என கூறப்படுகிறது.
நடந்தது என்ன?
புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவு முதல் 3.45 மணியளவில் இந்த கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. காது ஷியாம் கோயிலில் வழிபாடு செய்த பிறகு 22 பேர் அடங்கிய குழுவானது தங்களது வாகனத்தில் ஏறி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான எடாவிற்கு பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது மனோஹர்பூர் நெடுஞ்சாலையின் சர்வீஸ் பாதையில் நின்று கொண்டிருந்த லாரி மீது, எதிர்பாராத விதமாக பிக்அப் வாகனம் மோதியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுனரின் தூக்க கலக்கத்தால் விபத்து ஏற்பட்டதா? மது ஏதேனும் அருந்தி இருந்தாரா? அல்லது லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்ததற்கான எந்தவித முன்னெச்சரிக்கைகளும் ஏற்படுத்தாமல் இருந்ததா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர்கள் இரங்கல்:
ராஜஸ்தானின் தௌசாவில் நடந்த சாலை விபத்து குறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறார். ராஜஸ்தான் அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.






















