"திமுக எங்களை நிர்பந்திக்க முடியாது" - தொகுதி பங்கீடு சர்ச்சை குறித்து முத்தரசன் விளக்கம்...
எங்களை நிர்பந்திக்க திமுக பாஜக அல்ல; அடிபணிய நாங்கள் அதிமுக அல்ல என சிபிஐ முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் தேர்தல் தொடர்பான சுற்றுப்பயணத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: “இந்தத் தேர்தலில் குறைவான இடங்கள் வழங்கப்பட்டதால் சிபிஐ சமரசம் செய்து கொண்டதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. திமுக எங்களை நிர்பந்திப்பதற்கான பாஜக அல்ல. அதேபோல், அடிபணிவதற்கு நாங்கள் அதிமுக போன்ற கட்சியும் அல்ல. திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணி என்பது கொள்கை அடிப்படையிலான கூட்டணியாகும்.
அரசியலில் கொள்கை தான் முக்கியம்
கடந்த பல ஆண்டுகளாக இந்த கூட்டணி நிலைத்திருப்பதற்கான காரணம் கொள்கை ஒருமைப்பாடே. தமிழக தேர்தல் வரலாற்றைப் பார்க்கும்போது, பல கூட்டணிகள் உருவாகி ஒரு ஆண்டுக்குள் கலைந்துள்ளன. ஆனால், தற்போதைய கூட்டணி நீண்ட காலமாக தொடர்ந்து செயல்பட்டு வருவது அதன் கொள்கை நிலைப்பாட்டின் காரணமாகும்.
தொகுதி பங்கீடு என்பது எங்களுக்கு முக்கிய பிரச்னை அல்ல. நாட்டுக்கும் மாநிலத்திற்கும் எது தீங்கு விளைவிக்கிறது என்பதை தான் நாம் கவனிக்க வேண்டும். எங்களது பார்வையில், மதவாத அரசியல் நாட்டிற்கு அபாயம் ஏற்படுத்தும். அந்த அபாயத்தைத் தடுக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. அதனால் தான் இந்த கூட்டணியில் தொடர்கிறோம். இடங்கள் குறைவாக கிடைத்தது குறித்து எங்களுக்கு கவலை இல்லை,” என்றார்.இந்த சந்திப்பின் போது வால்பாறை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் வெ. விஷ்வபிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






















