இரவு ரோந்தில் சிக்கியது 5 டன் ரேஷன் அரிசி... கடத்தலை முறியடித்த கோவை போலீஸ்...
ஐந்து டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று வாகனங்களை பறிமுதல்.

கேரளாவிற்கு கடத்த முயன்ற ஐந்து டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்ததுடன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்
கோவை, கவுண்டம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், கவுண்டம்பாளையம் போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக இணைந்து போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இடையர்பாளையம் அண்ணா நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சரக்கு வேன்கள் மற்றும் ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் கவனித்தனர். வாகனங்களை சுற்றிவளைத்து பிடித்த போலீசார், அவற்றை சோதனை செய்தனர். சோதனையில் வாகனங்களுக்குள் அதிக அளவில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விசாரணையில், அந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரேஷன் அரிசி என்பதும், அதை சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக சுமார் ஐந்து டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இடையர்பாளையம் நீலிம்மன் நகரைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த கடத்தல் வலையமைப்பில் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.























