சூலூரை உலுக்கிய 0 வயது சிறுமி கொலை வழக்கு... சிறைக்குள்ளேயே தாக்கப்பட்ட முக்கிய குற்றவாளி...
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்தில், காயமடைந்த அவர் பலத்த பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த அவர் மேல்சிகிச்சைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சூலூர் பகுதியில் சிறுமி கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் (33) மற்றும் மற்றொரு நபர் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக், கைது நடவடிக்கையின்போது ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது. மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து அண்மையில் சிறைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் சிறை வளாகத்தில் அவரை சில கைதிகள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த அவரை சிறைத்துறை காவலர்கள் உடனடியாக மீட்டு, சிறை மருத்துவப் பிரிவில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், நள்ளிரவு நேரத்தில் பலத்த பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறை வளாகத்திற்குள் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















