பச்சிளம் குழந்தைகளை வைத்து யாசகம் – வடமாநில பெண்கள் மீது சந்தேகம்
பச்சிளம் குழந்தைகளை வைத்துப் யாசகம் எடுத்த வடமாநில பெண்கள். குழந்தைகள் மீட்க நல மையத்தில் ஒப்படைப்பு.

கோவை மாநகரில் பச்சிளம் குழந்தைகளை கையில் ஏந்தியபடி யாசகம் எடுத்து வந்த வடமாநில பெண்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தைகள் அவர்களுடைய சொந்தக் குழந்தைகள் அல்ல என்ற தகவல் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததால், குழந்தை கடத்தல் கும்பல் தொடர்பா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கோவைபுதூர், மரக்கடை, உக்கடம் உள்ளிட்ட நகரின் முக்கிய போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் நெரிசல் அதிகம் காணப்படும் சந்திப்புகளில் கடந்த சில நாட்களாக வடமாநிலத்தைச் சேர்ந்த சில பெண்கள், சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு வாகன ஓட்டிகளிடம் யாசகம் எடுத்து வந்தனர். கடும் வெயிலும் மழையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளை பயன்படுத்தி யாசகம் எடுப்பது பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
வடமாநில பெண்களிடம் இருந்து 10 குழந்தைகள் மீட்பு
இதனை தொடர்ந்து, நேதாஜி இளைஞர்கள் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அந்தப் பெண்களை தடுத்து வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர்கள் கூறிய தகவல்களில் முரண்பாடு இருந்ததால் உடனடியாக குழந்தைகள் நல வாரியத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட குழந்தைகள் மிகவும் குறைந்த வயதுடையவர்கள் என்பதும், அவர்களில் சிலர் அந்த பெண்களின் சொந்தக் குழந்தைகள் அல்ல என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த குழந்தைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டனர், குழந்தைகள் கடத்தல் சம்பவமா, அல்லது யாரிடமிருந்து பெற்ற குழந்தைகளா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.























