வறண்டு போகும் குளம் குட்டைகள்... மீண்டும் சர்ச்சையாகும் அவிநாசி–அத்திகடவு திட்டம்...
அன்னூர் பகுதியில், அவிநாசி–அத்திகடவு திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை எனக் கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

60 ஆண்டுகால போராட்டத்தின் விளைவாக கிடைத்த அவிநாசி–அத்திகடவு திட்டம், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதாகவும், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தற்போதைய திமுக அரசு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
பாழாய் போகும் அவிநாசி அத்திகடவு திட்டம்
இந்த திட்டத்தின் மூலம் அனைத்து குளம், குட்டைகளுக்கும் தண்ணீர் சென்றடைய வேண்டும் என்ற நிலையில், தற்போது சுமார் 50 சதவீத நீர்நிலைகளுக்கே தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அன்னூர் பயணியர் மாளிகை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏர்முனை இளைஞர் அணி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் அத்திகடவு திட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது, திமுக அரசுக்கு எதிராகவும், அனைத்து குளங்களுக்கும் சீரான முறையில் தண்ணீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.























