LGBTQ - குறித்து பேச்சு; மன்னிப்பு கேட்ட திருமாவளவன்
எந்த உள்நோக்கத்தோடும் அந்த கருத்து கூறவில்லை , எனது கருத்து அவர்களை காயப்படுத்தியதாக அறிந்தேன், காயப்படுத்தியதற்காக வருந்துகிறேன் - திருமாவளன்

இரட்டைமலை சீனிவாசனுக்கு மரியாதை
சென்னை ஓட்டேரியில் உள்ள திவான் பகதூர் திராவிட மணி இரட்டை மலை சீனிவாசன் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதற்காக ஓட்டேரி இடுகாடு வந்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இடுகாட்டு நுழைவாயிலில் இருந்து பேரணியாக வந்தார்.
திவான் பகதூர் திராவிட மணி இரட்டை மலை சீனிவாசன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது ;
திவான் பகதூர் திராவிட மணி இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாள் இன்று அவரது நினைவை போற்றுகின்றோம். திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் , நீதி கட்சிகளின் தலைவர்களில் ஒருவர், அம்பேத்கருக்கு முன்னோடியாக இருந்தவர். அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். அம்பேத்கர் உடன் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றவர். வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று வட்டமேசை மாநாட்டில் எடுத்து உரைத்தவர்.
விடுதிகள் பெயர் மாற்றம்
ஓட்டேரி இடுகாட்டு அருகே உள்ள சாலைக்கு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி இரட்டை மலை சீனிவாசன் சாலை என்று பெயர் சூட்டி இருப்பதை வரவேற்கிறோம். அதற்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நன்னாளில் BC, SC, ST விடுதிகளை சமூக நீதி விடுதிகள் என பெயர் மாற்றம் செய்திருக்கிறார் முதலமைச்சர் சமத்துவமே இலக்கு சமூக நீதியே வழி என்கின்ற அடிப்படையில் ஆட்சி நிர்வாகத்தின் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை விசிக வரவேற்கிறது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து விளிம்பு நில மாணவர்களுக்கும் சமூகநீதி விடுதிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது வரவேற்கத்கது.
கடந்த பிப்ரவரி 12 - ம் தேதி கோவையில் , ஒரே பாலினத்தவர்களுக்கு இடையே வரும் காதல் இயக்கவியலுக்கு எதிரானது என்று திருமாவளவன் கூறியது விமர்சனத்துக்கு உள்ளானது.
LGBTQ பற்றி கூறியது தொடர்பாக திருமாளவனிடம் கேள்வி எழுப்பியதற்கு ;
எந்த உள்நோக்கத்தோடும் அந்த கருத்து கூறவில்லை, எனது கருத்து அவர்களை காயப்படுத்தியதாக அறிந்தேன். காயப்படுத்தியதற்காக வருந்துகிறேன்.
திமுக - அதிமுக , கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளது. விசிக தேர்தல் பணிகளை தொடங்கியதா என்ற கேள்விக்கு ;
தேர்தல் பணி என்பது களப்பணிகளில் ஒன்று அதுவே எங்களது முதன்மையான பணி அல்ல எனவும் தேர்தல் நெருங்கி வரக் கூடிய சூழலில் அதை நாங்கள் தீவிரப்படுத்தவும் கட்சியின் மறு சீரமைப்புக்கான பணிகளின் கவனம் செலுத்துவோம் என தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் உள்ள விசிக இரட்டை இலக்கு தொகுதிகளை கேட்குமா என்ற கேள்விக்கு ;
மீண்டும் மீண்டும் கேட்கப்படக்கூடிய ஒரே கேள்வியாக இருக்கிறது. தேர்தல் நேரத்தில் இதைப் பற்றி கேளுங்கள் நான் சொல்கிறேன்.
அதிமுக மற்றும் தவெக இணைந்தால் கூட்டணி பலமானதாக இருக்கும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசியது குறித்தான கேள்விக்கு ;
ஊடகத்தினர் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லியிருப்பார். அது அவரின் விருப்பமும் கிடையாது. யூகங்களுக்கெல்லாம் யூகமாக பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திமுக தலைமையில் உள்ள கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இருக்கிறது, இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. உறுதியாக இருக்கிறது இந்த கூட்டணி கட்டுக்கோப்பாகவே இந்த தேர்தலை சந்தித்து வெற்றி பெறும்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறுவது குறித்தான கேள்விக்கு ;
100 க்கு 100 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. பெரும்பான்மையான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முக்கியமான சில கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்பது தவிர்க்க முடியாத மறுக்க முடியாத ஒன்று தான். விசிக்கவும் பழைய ஓய்வூதிய திட்ட கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரின் கவனத்திற்கு அவ்வபோது சுட்டிக்காட்டி இருக்கிறோம் தேர்தலுக்கு முன்னதாகவே நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்.
தவெக - விசிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வருகிறது என்ற கேள்விக்கு ;
அதை யார் கூறினார்களோ அவர்களிடமே கேளுங்கள் என சிரித்தவாரே தெரிவித்தார்.
விசிகாவில் எப்போது மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்விக்கு ;
மாவட்டச் செயலாளர்களை விரைவில் நியமிப்போம் என தெரிவித்தார்.





















