மருத்துவமனையில் மழைக்கு ஒதுங்கிய போது தொழிலாளர்கள் பார்த்த அதிர்ச்சி சம்பவம்
இரண்டு ஆண்டுகளாக மருத்துவமனை பகுதியில் கிடந்த எலும்பு கூடு கண்டெடுப்பு

மருத்துவமனையில் கிடந்த எழும்பு கூடு
அரியானா மாநிலம் பரீதாபாத் நகரில் உள்ள பாட்ஷா கான் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய ஆழ்துளைக் கிணறு அறையிலிருந்து மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் தற்போது நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளின் போது, மழையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தொழிலாளர்கள் அந்தப் பழைய அறைக்குள் நுழைந்த போது அங்கு மனித எலும்புக்கூடு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
இரண்டு ஆண்டுகள் பழமையான எலும்பு கூடு
கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த ஆழ்துளைக் கிணறு பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாததாலும், அந்த அறை பூட்டியே கிடந்ததாலும் அங்கு எலும்புக்கூடு இருப்பது யாருடைய கவனத்திற்கும் தெரியாமல் போயுள்ளது. மேலும், அந்த அறை மருத்துவமனையின் பிணவறைக்கு அருகிலேயே அமைந்துள்ளதால், உடல் அழுகிய போது ஏற்பட்ட துர்நாற்றத்தை அங்கிருந்த மருந்துகளின் மணம் மறைத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இந்த எலும்புக்கூடு சுமார் இரண்டு ஆண்டுகள் பழமையானது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. யாராவது கொலை செய்யப்பட்டு அங்கு வீசப்பட்டார்களா அல்லது போதைப் பொருள் பயன்படுத்தும் நபர் யாராவது அங்கு தங்கியிருந்த போது உயிரிழந்தாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடு ஆணா அல்லது பெண்ணா என்பதைத் தற்போதைய நிலையில் உறுதி செய்ய முடியாததால், அதன் மாதிரிகள் மரபணு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் நகரில் மாயமானவர்களின் பட்டியலைச் சேகரித்து வரும் காவல்துறையினர், இந்த மர்ம மரணம் குறித்து விரிவான விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
ட்ரெண்டிங் செய்திகள்






















