அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் வரலாம் - செல்வப்பெருந்தகை
அதிமுக பாஜக கூட்டணி வலுவான கூட்டணி கிடையாது. கொள்கை கூட்டணி கிடையாது. அவர்களுக்குள்ளேயே எந்த பிரச்சினை வேண்டுமானாலும் வரலாம்.

ராஜீவ் காந்தியின் 34 ம் ஆண்டு நினைவு நாள்
மறைந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் 34 ஆம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை மரியாதை செலுத்தினார். தொடர்ந்து , பயங்கரவாத எதிர்ப்பு நாள் உறுதி மொழியை ஏற்று ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை ;
பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த ராஜீவ் காந்தியின் நினைவு நாள் இன்று. தொடர்ந்து ராகுல் காந்தியும் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். தற்பொழுது ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல்வேறு கேள்விகளை ராகுல் காந்தி வைத்திருக்கிறார். ஆனால் அதற்கு மோடி அரசிடம் பதில் இல்லை. பயங்கரவாதத்திற்கு தீர்வு காணாமல் இதை மோடி அரசு கைவிடக் கூடாது.
எல்லா முதலமைச்சர்களும் தான் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க , தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதை காங்கிரஸ் வரவேற்கிறது.
வலிமையான கூட்டணி எங்காவது உண்டா ?
இந்தியா கூட்டணி தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் வலிமையான எஃகு கோட்டை போல் உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் இருக்கும் கூட்டணி போன்று வலிமையான கூட்டணி எங்காவது உண்டா ? அடுத்த ஆட்சியும் இங்கு இந்திய கூட்டணி ஆட்சி தான் வரும்.
ஜெயலலிதாவை குற்றவாளி என்று சொன்னவர்களிடம் கூட்டணி
அதிமுக - பாஜக கூட்டணி வலுவான கூட்டணி கிடையாது. கொள்கை கூட்டணி கிடையாது. அவர்களுக்குள்ளேயே எந்த பிரச்சினை வேண்டுமானாலும் வரலாம். நேற்று ஜெயலலிதாவை குற்றவாளி என்று கூறிய அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். ஜெயலலிதா பற்றி காங்கிரஸ் இயக்கம் என்றைக்காவது தரம் தாழ்ந்த வகையில் பேசியிருக்கிறதா? ஆனால் அவர்களை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு கேவலமாக பேசியவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். எனவே இது சந்தர்ப்பவாத கூட்டணி. ஆனால் எங்கள் கூட்டணி உறுதியான கொள்கை கூட்டணி நிலையான கூட்டணி.





















