![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சேகர் ரெட்டி மீதான வருமான வரித்துறை வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது
சேகர்ரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![சேகர் ரெட்டி மீதான வருமான வரித்துறை வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது Madras High Court has canceled the order issued by the Income Tax Department to the company owned by Sekar Reddy சேகர் ரெட்டி மீதான வருமான வரித்துறை வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/12/2ef4ab06aca8d7330e39287575314fc51660281152699102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த 2014-15 முதல் 2017-18ம் ஆண்டுகளுக்கு 2 ஆயிரத்து 682 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும்படி, சேகர்ரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ். மைனிங் என்ற நிறுவனம், கடந்த 2014-15 முதல் 2017-18ம் மதிப்பீட்டு ஆண்டுகளில் 384 கோடியே 55 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதாக கூறி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தது.
கடந்த 2016ம் ஆண்டு சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை, கோடிக்கணக்கிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் கரன்சிகளை, ஆவணங்களையும் பறிமுதல் செய்தது.
அந்த ஆவணங்களில் இருந்து சேகர் ரெட்டி, மணல் கொள்ளைக்காக 247 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கியதாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனம், அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் இருந்து 217 கோடி ரூபாயும், வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கத்திடம் இருந்து 155 கோடி ரூபாயும், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் இருந்து 197 கோடி ரூபாய் பெற்றுள்ளதும், பின்னர் இந்த தொகை, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கட்சி வேட்பாளர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, 2014-15 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்தின் வருமானம் 4 ஆயிரத்து 442 கோடி ரூபாய் என தீர்மானித்த வருமான வரித்துறை, அதற்கு 2 ஆயிரத்து 682 கோடி ரூபாயை வரியாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஆர்.எஸ். மைனிங் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, இந்த வழக்கில் குறுக்கு விசாரணை செய்யப்படாத சாட்சிகளின் வாக்குமூலங்கள், வருமான மதிப்பீட்டின் போது பயன்படுத்தப்பட மாட்டாது என தனி நீதிபதி முன் உறுதியளித்த வருமான வரித்துறை, அதற்கு மாறாக செயல்பட்டு, நீதிமன்றத்துடனும், மனுதாரருடனும் கண்ணாமூச்சி ஆடியுள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.
இந்த அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், வருமான வரித்துறையின் உத்தரவுகளை ரத்து செய்து, குறிப்பிட்ட இந்த ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை மறு மதிப்பீடு செய்து புதிதாக உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
மற்றொரு வழக்கு
பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசிய கனல் கண்ணனை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியிருந்தார்.
இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல்கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைபடுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாலேயே அதை இடிக்க வேண்டுமென பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சமீப காலமாக இந்து மத கடவுள்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராக பல வீடியோ பதிவுகள் பதிவிடப்படுவதாகவும், அவை தொடர்பாக தனி நபர்களும், அமைப்புகளும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மனு நீதிபதி எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கனல் கண்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், மனுதாரர் பேசியது, நாட்டின் எந்த சட்டத்துக்கு எதிரானது அல்ல என்றும், அந்த சிலையை அகற்றக்கோரி, ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டார். சிலையை நிறுவிய நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், மனுதாரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், சிலையை உடைக்கப் போவதாக கூறவில்லை என்றும், மாறாக, சிலையை அகற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கைதான் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது ஒன்றும் தீங்கானது அல்ல என்றும், எந்த குற்றமும் செய்யவில்லை. என்றும் கூறி, எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, கனல் கண்ணன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது என்றும், மதங்களை குறுப்பிட்டு பேசியுள்ளார் என்றும், இரு தரப்பினர் இடையே மத மோதல், பகைமை, மற்றும் வெறுப்பை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டார். அவர் பேசிய வீடியோவை, சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரின் விபரங்கள் கேட்கப்பட்டு உள்ளதாகவும்,.தற்போது தலைமறைவாகியுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டது.
பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதால், கனல் கண்ணனை கைது செய்து, விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்பதால், முன் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது..
அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி எஸ்.அல்லி முன் ஜாமின் கோரிய கனல் கண்ணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)