சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ விமானத்தில் ஏசி கோளாறு! 5 மணி நேரம் பயணிகள் தவிப்பு! நடந்தது என்ன?
சிங்கப்பூர் செல்ல இருந்த இண்டிகோ விமானம், ஏசி கோளாறால் சுமார் 5 மணி நேரமாக பயணிகளுடன் நின்றிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், திடீரென ஏசி இயங்காமல், விமானத்திற்குள் வெப்பநிலை பரவியதால், பயணிகள் அவதி அடைந்தனர்.
இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் காலை 7.20 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 198 பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். அதன்பின்பு விமானம் ஓடுபாதையில் ஓடுவதற்கு தயாரான போது, விமானத்திற்குள், ஏசி வேலை செய்யாமல், மிகுந்த வெப்பநிலை இருந்துள்ளது.
விமானத்துக்குள் இருந்த பயணிகள், கூச்சல் போட்டுள்ளனர். உடனடியாக விமானி, விமானத்தை மேற்கொண்டு இயக்காமல், ஏர்கிராப்ட் டெம்பரேச்சர் ப்ராப்ளம் என்று கூறி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்தார். இதை அடுத்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. இந்தநிலையில் விமானி, விமானத்தில் ஏர்கிராஃப்ட் டெம்பரேச்சர் பிராப்ளம் இருப்பதால், அதை சரி செய்த பின்பு வேறு விமானி வந்து விமானத்தை இயக்குவார் என்று கூறி, தனது பணி முடிந்து விட்டதாக, அவர் விமானத்தில் இருந்து இறங்கி சென்று விட்டார்.
ஏர் கிராப்ட் டெம்பரேச்சர் பிரச்சனை
அதன்பின்பு சிறிது நேரத்தில் விமானத்துக்குள் நிலவிய ஏர் கிராப்ட் டெம்பரேச்சர் பிரச்சனை சீர் செய்யப்பட்டது. இதை அடுத்து விமானம் உடனடியாக, விமானம் புறப்பட்டு விடும் என்று பயணிகள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் நீண்ட நேரமாக, விமானத்தை இயக்குவதற்கு விமானி வராததால், பயணிகள் விமானத்துக்கு உள்ளேயே இருந்து, தவித்துக் கொண்டு இருந்தனர்.
இந்தநிலையில் விமானத்துக்குள், மீண்டும் ஏசி இயங்குவது நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் விமானத்துக்குள் இருக்க முடியாமல், விமானத்தின் கதவுகள் திறந்திருந்த வழியாக இறங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் பயணிகள் இறங்குவதற்கு, விமானத்தில் லேடர் பொருத்தப்படாததால், பயணிகள் விமானத்தை விட்டு கீழே இறங்க முடியவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்
பயணிகள் விமானத்துக்குள் இருந்து தவித்ததோடு, விமானத்துக்குள் கோஷமிட்டு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்பு விமானத்துக்குள் ஏசி மீண்டும் இயங்கத் தொடங்கியது. ஆனால் விமானத்தை இயக்க விமானி மட்டும் வராததால், பயணிகள் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக, விமானத்துக்குள் அமர்ந்திருந்து தவித்தனர்.
இந்த 198 பயணிகளில், 19 பேர் கைக்குழந்தைகளுடன் கூடிய, பெண்கள். அதோடு மேலும் பல பெண்கள், சீனியர் சிட்டிசன் எனப்படும் மூத்த குடிமக்கள் பயணிகளும் பலர் இருந்தனர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால், உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகி அவதிப்படும் நிலை ஏற்பட்டது. பயணிகள் ஒட்டுமொத்தமாக கீழே குதித்து விடுவோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, பயணிகளை மிரட்டி, விமானத்திலிருந்து கீழே இறங்க விடாமல் தடுத்து, மீண்டும் உள்ளே அனுப்பினர். இதனால் சென்னை விமான நிலையத்தில், மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
தாமதமாக புறப்பட்ட விமானம்
இந்தநிலையில் காலை 11 மணிக்கு மேல், விமானத்தை இயக்குவதற்கு மாற்று விமானி வந்து சேர்ந்தார். இதை அடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தில் அமர வைக்கப்பட்டனர். அதன்பின்பு அந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக, நேற்று காலை 11.40 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் இதை போல் பாதிப்புக்கு உள்ளான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகள், நடந்த சம்பவங்கள் குறித்து, வீடியோக்கள் எடுத்து, சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளனர். அதோடு விமான பாதுகாப்பு சட்ட விதிமுறைகளின் படி, வானில் பறக்காமல் தரையில் நின்று கொண்டிருக்கும் விமானத்துக்குள், பயணிகளை 2 மணி நேரத்திற்கு மேல், அமர வைப்பது விமான பாதுகாப்பு சட்டத்துக்கு முரணானது என்று இருப்பதால், இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள், தரையில் நின்று கொண்டிருந்த விமானத்திற்குள், 4 மணி நேரத்திற்கு மேல், அமர வைக்கப்பட்டு அவதிப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
நிறுவனத்தின் விளக்கம் என்ன ?
இதுகுறித்து இன்று நிறுவனம் கூறுகையில், விமானத்தின் கேபின் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்தது. இந்த சூழலில் விமானத்தை இயக்குவது சரியாக இருக்காது. உள்ளே இருந்த பயணிகளுக்கு குடிநீர், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. இது எஸ்.ஓ.பி எனும் நிலையான இயக்கம் முறை தான் என விளக்கம் அளித்துள்ளது.























