மின் கோபுர வழித்தட இழப்பீடு ; விவசாயிகளுக்கு இனி அதிக நிவாரணம் ! தமிழக அரசின் அதிரடி முடிவு
அதிக திறன் உடைய மின் கோபுர வழித்தடங்கள் அமைக்க , நிலம் தருவோருக்கான இழப்பீட்டை மும்மடங்காக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மின் கோபுர வழித்தடங்கள் அமைக்க , நிலம் தருவோருக்கான இழப்பீட்டை மும்மடங்காக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் அனல் நீர் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் , மின் கோபுர வழித்தடங்கள் வாயிலாக பல்வேறு இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. விவசாயிகள், தனியாருக்கு சொந்தமான நிலங்களில் இந்த மின் கோபுர வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.
நிலத்தின் மேல் மின் வழித்தடம் அமைக்கப்படும் போது , அதன் உரிமையாளருக்கு நிலத்தின் வழிகாட்டி மதிப்பில், 100 சதவீதமும், மேலே செல்லும் கம்பி வழித்தடத்துக்கு, 20 சதவீதமும் இழப்பீடு வழங்கப்படுகிறது. திருப்பூர், கோவை, உள்ளிட்ட பகுதிகளில் மின் கோபுர வழித்தடம் அமைக்க, அதிக இழப்பீடு கேட்டு சிலர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மின் வழித்தடங்களை அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது ;
அரசு நிர்ணயம் செய்துள்ள இழப்பீட்டு தொகையை ஏற்காத பட்சத்தில், மாவட்ட வருவாய் துறையினர் பேச்சு நடத்தி, அவர்கள் கேட்கும் தொகை வழங்கப்படுகிறது. தமிழக மின் தேவை அதிகரித்து வரும் சூழலில், அதற்கு ஏற்ப புதிய மின் கோபுர வழித்தட திட்டங்களை செயல் படுத்த வேண்டியுள்ளது.
மத்திய அரசின், பவர் கிரிட் நிறுவனம், மின் வழித்தடங்கள் அமைக்க, வழிகாட்டி மதிப்பை விட கூடுதல் இழப்பீடு வழங்குகிறது. இதனால், அதன் திட்டங்கள் குறித்த காலத்தில் முடிக்கப்படுகின்றன.
எனவே, புதிய மின் வழித்தடங்களை விரைவாக அமைக்க, தற்போது வழங்கப்படும் இழப்பீட்டை விட மும்மடங்கு வரை உயர்த்தி வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது என இவ்வாறு அவர் கூறினார்.
NLC புதிய மின் நிலையத்தில் தமிழகத்திற்கு 830 மெகாவாட் ஒதுக்கீடு
சுடலுார் மாவட்டம் நெய்வேலியில் என். எல்.சி., எனப்படும் நிலக்கரி நெய்வேலி நிறுவனம் அமைக்கும் புதிய அனல் மின் நிலையத்தில் இருந்து, தமிழகத்திற்கு 830 மெகா வாட் மின்சாரத்தை, மத்திய மின்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் , மத்திய அரசின் என்.எல்.சி., நிறுவனத்திற்கு 3,390 மெகா வாட் திறனில் நான்கு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 1,730 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதி மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு தரப்படுகிறது.
நெய்வேலியில் தலா 500 மெகாவாட் திறனில், இரு அலகுகள் உடைய இரண்டாம் விரிவாக்க அனல் மின் நிலையத்தை என்.எல்.சி., நிறுவனம் அமைக்க உள்ளது. இதில், உற்பத்தி செய்யப்பட உள்ள மின்சாரத்தில், 830.44 மெகாவாட்டை தமிழகத்திற்கும், 19.56 மெகா வாட்டை புதுச்சேரிக்கும் மத்திய மின்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
மீதமுள்ள 150 மெகா வாட் மின்சாரம் எந்த மாநிலத்திற்கும் ஒதுக்கப்படாமல் மத்திய அரசிடம் இருக்கும். இந்த மின்சாரத்தை, மின் தேவை அதிகம் உள்ள மாநிலங்களுக்கு சுழற்சி அடிப்படையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது.





















