காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
கஞ்சா சோதனைக்குச் சென்ற போலீசாருக்கும், ரவுடியின் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கஞ்சா விற்பனை - காவல் துறைக்கு ரகசிய தகவல்
சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியந்தோப்பு காந்தி நகர் 5 வது தெருவில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையி லான போலீசார், சரித்திர பதிவேடு ரவுடி யான நந்தகுமார் என்பவரின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது வீட்டிலிருந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் மேற்கொண்ட சோதனையில், 29 கஞ்சா பொட்டலங்களும், 6 சிரிஞ்சுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து நந்தகுமாரை கைது செய்து வெளியே அழைத்து வந்த போது, அவரது தாயார் மற்றும் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், போலீசார் மற்றும் நந்தகுமாரின் குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கையை பிளேடால் கிழித்து கொண்டு போராட்டம்
கைது செய்யப்பட்ட நந்தகுமாரை விடுவிக்கக் கோரி, அவரது தாயார் மீனா பேசின் பிரிட்ஜ் காவல் நிலையம் முன்பு வந்து தனது கையை பிளேடால் கிழித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்த போலீசார் அவரை சமாதானப் படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
கஞ்சா வழக்கில் நந்தகுமாரை கைது செய்துள்ள போலீசார், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் அவரது உறவினர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















