வீட்டில் எலிகளின் தொல்லையால் அவதியா? - மருந்தே இல்லாமல் விரட்ட எளிய வழி!
வீட்டில் எலிகளின் தொல்லையை போக்க நாம் எலிப்பொறி, எலி பேஸ்ட், விஷம் தடவிய கேக் ஆகியவற்றை வைக்கிறோம். இதனைக் குறைக்க என்ன செய்வதென்று பலருக்கும் தெரிவதில்லை.

உடல் நல பிரச்னைகள் எப்படி மனிதர்களின் வாழ்வில் அதிகப்படியான துன்பத்தை உண்டாக்குமோ, அதேபோல் வீட்டினுள் இருக்கும் பிரச்னைகள் நமக்கு மன அழுத்தம் உள்ளிட்ட பல விளைவுகளை உண்டாக்குகிறது. அந்த வகையில் வீட்டின் மூலைகளிலோ, ஜன்னல்களுக்குப் பின்னலோ அல்லது சமையலறை அலமாரிகளிலோ எலி பிரச்னை இருப்பதை நினைத்தாலே பலருக்கும் பிபி எகிறி விடும். ஒரு எலி வீட்டுக்குள் நுழைந்தால் அது ருசி கண்ட பூனையாக அந்த வீட்டை விட்டு அவ்வளவு எளிதில் வெளியேறாது.
உணவுப் பொருட்கள் தொடங்கி ஆவணங்கள், மரச்சாமான்கள் என எதையும் எலிகள் விட்டு வைக்காது. அவற்றின் தொல்லையை போக்க நாம் எலிப்பொறி, எலி பேஸ்ட், விஷம் தடவிய கேக் ஆகியவற்றை வைக்கிறோம். இதனைக் குறைக்க என்ன செய்வதென்று பலருக்கும் தெரிவதில்லை. அவர்கள், பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி எலிகளை கொல்லாமல் வீட்டை விட்டு வெளியேற்ற முடியும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
என்னென்ன வழிமுறைகள்
வெங்காயத்தை நன்றாக மசித்து அதன் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். பின்னர் எலிகள் இருக்கும் என யூகிக்கும் இடத்திலோ அல்லது உங்கள் வீட்டின் மூலைகளிலோ தெளிக்கவும். பொதுவாகவே எலிகளுக்கு வெங்காயத்தின் வாசனை பிடிக்காது. இந்த வாசனையால் அவை சலிப்படைந்து நாளடைவில் வீட்டை விட்டு ஓடிவிடும் வாய்ப்பு உள்ளது
அடுத்ததாக கற்பூர வாசனை எலிகளுக்கு மிகவும் கடுமையான அதிருப்தியை உண்டாக்கும் என கூறப்படுகிறது. கற்பூரத்தை வீட்டின் மூலைகளிலோ, அலுவலகம், வணிகம் செய்யும் இடம், சமையலறை பலகையின் கீழ் அல்லது எலிகள் சுற்றித் திரியும் இடங்களில் வைக்கலாம். அதன் வாசனை பரவியவுடன் எலிகள் அங்கேயே இருக்க முடியாது. உள்ளே இருந்து வெளியே ஓடி இடத்தை காலி செய்து விடும்.
மேலும் எலிகளுக்கு புதினாவின் வாசனை பிடிக்கவே பிடிக்காது. வீட்டின் மூலைகளில் புதிய புதினா இலைகளை வைக்கலாம். அல்லது எலிகள் திரியும் இடங்களில் வைக்கலாம். நீங்கள் விரும்பினால், பஞ்சில் புதினா சாறு அல்லது எண்ணெயையும் ஊற்றலாம். இது எலிகள் வராமல் தடுக்கும்.
படிகாரப் பொடியை அரைத்து தண்ணீரில் கலக்கவும். இப்போது இந்தக் கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி வீட்டின் மூலைகளிலும், எலிகள் வரும் பாதைகளிலும் தெளிக்கவும். படிகாரத்தின் வாசனையும் விளைவும் எலிகளை அந்த இடத்தை விட்டு வெளியேறச் செய்யும்.
மேலே குறிப்பிடப்பட்ட விஷயங்கள் மட்டும் எலிகளுக்கு பிரச்னையாக அமையும் என்பது கிடையாது. நம்முடைய சுற்றுப்புற சுகாதாரமும் எலிகள் நம் வீட்டை அண்டாமல் இருப்பதற்கான காரணமாக அமையலாம். வீட்டில் எக்காரணம் கொண்டும் உணவுப் பொருட்களைத் திறந்து வைக்காதீர்கள். ஒவ்வொரு நாளும் குப்பைகளை வெளியே எடுக்கவும். வீடு சுத்தமாகவும் மணமற்றதாகவும் இருக்கும்போது, எலிகள் இருக்காது. எலிகள் இருப்பதாக தெரிந்தால் என்ன வாசனைக்கு வந்தது, எந்த வழிகள் வழியாக நுழைகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். எலிகளின் கழிவுகள் வீட்டில் இருந்தால் உடனடியாக நீக்க வேண்டும்.























