Chikungunya: அதிகரித்த கொசு.. வேகமாக பரவும் சிக்குன்குனியா .. அறிகுறிகள் என்ன, தடுப்பது எப்படி?
Chikungunya in Tamil Nadu: சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொசுக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பரவும் சிக்குன்குனியா நோயை எப்படி தடுக்கலாம் என பார்க்கலாம்.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொசுக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பரவி வரும் சிக்குன்குனியா நோயை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகமும், மாநில சுகாதாரத்துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இப்படியான நிலையில் பருவகால நோயாக பார்க்கப்படும் சிக்குன்குனியா கொசுக்கள் மூலம் பரவும் மிக மோசமான நோயாகும்.
சிக்குன்குனியா வரலாறு
இது ஒரு தொற்று நோயாகும். இந்த சிக்குன்குனியா ஏடிஎஸ் வகை கொசுக்களால் மூலம் மனிதர்களிடையே பரவும். இது உயிர்க்கொல்லி நோய் அல்ல என்றாலும், இதனால் மரணங்கள் பதிவாகியுள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
1952ம் ஆண்டு தான்சானியா நாட்டில் தான் இந்த நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மூட்டு வலியால் அவதிப்படுவார்கள். கை, கால்கள் மடக்கி குனிந்த நிலையில் வளைந்து இருப்பதால் மகொண்டே மொழியில் இதற்கு சிக்குன்குனியா என பெயர் வந்தது.
அறிகுறிகள் என்ன?
சிக்குன்குனியா ஏடிஎஸ் வகை கொசுக்கள் மூலம் பரவும் நிலையில் இந்த கொசுக்கள் பகல் நேரங்களிலும், அதிகாலையில் சூரிய அஸ்தமனத்திற்கும் முன்பும் அதிகமாக கடிக்கும் என ஆய்வு முடிவுகள் சொல்கிறது. மூட்டு வலி, கடுமையான தலைவலி, காய்ச்சல், தசைகள் வலி, தோல்களில் அரிப்பு, வெண்படல அழற்சி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட கால மூட்டு வலி பிரச்னையை எதிர்கொள்வார்கள். இது 5 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும்.
தடுப்பது எப்படி?
பொதுவாக சிக்குன்குனியாவை உண்டாக்கும் கொசுக்கள் பகல் நேரங்களில் கடிக்கக்கூடியது என்பதால், மக்கள் அவற்றில் இருந்து பெரும்பாலும் விலகியிருக்க அறிவுறுத்தப்படுகிறது. வீட்டில் இருக்கும் ஜன்னல்களில் கொசு வலைகளை பயன்படுத்துங்கள். அதன்மூலம் வீட்டுக்குள் கொசு வருவது தடுக்கப்படும். அடுத்ததாக சருமம் வெளியேர் தெரியாத வகையில் நீண்ட ஆடைகளை அணியுங்கள்.
மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட கொசு விரட்டி மருந்துகளை பயன்படுத்துங்கள். பூந்தொட்டிகள், பயன்படுத்தப்பட்ட டயர்கள் அல்லது தேவையில்லாத பொருட்களில் தண்ணீர், கழிவு நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தை மூடி பயன்படுத்துங்கள். உடல்நல பாதிப்பு இருப்பவர்கள், கர்ப்பிணிகள் போன்றவர்கள் இந்த நோய் பாதிப்பில் எச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது.
எக்காரணம் கொண்டு காய்ச்சல், தலைவலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் சுயமாக மருத்துவம் செய்யாமல் அருகிலுள்ள மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறலாம். எலுமிச்சை புல், சிட்ரோனெல்லா மற்றும் சாமந்தி ஆகிய தாவரங்களை வளர்ப்பது வீட்டின் அருகில் கொசுக்கள் பரவுவதை தடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டால் சமச்சீரான உணவு, நீரிழப்பை தடுக்க தண்ணீர், தேங்காய் தண்ணீர் அல்லது எலக்ட்ரோலைட் கரைசல்கள் குடிப்பது போன்றவை செய்யலாம். பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சர்க்கரை நிறைந்த சிற்றுண்டிகளை தவிர்க்க வேண்டும். இஞ்சி டீ, மஞ்சள் கலந்த பால், துளசி நீர், வெந்தய விதை ஊற வைக்கப்பட்ட நீர் போன்றவையும் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.























