TNUSRB 2027 தேர்வு கால அட்டவணை வெளியீடு: அரசுப் பணி கனவு நனவாகிறது!
தமிழக இளைஞர்கள் மிக ஆவலோடு எதிர்பார்க்கும் பொதுத்தேர்வு (Common Recruitment) அறிவிப்பானது 2027 ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளது.
தமிழக இளைஞர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) தனது 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தற்காலிக தேர்வுக்கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அரசுப் பணியில் சேர்ந்து மக்கள் பணியாற்றத் துடிக்கும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டுத் திட்டத்தின்படி, முதலாவதாக சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம் - Sub-Inspector Technical) பணிக்கான அறிவிப்பு வரும் 2027 பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல் (ECE) துறையில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற டிப்ளமோ (Diploma) சான்றிதழ் அல்லது AICTE அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.இ (B.E) அல்லது பி.டெக் (B.Tech) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து, கலை மற்றும் இசைத் துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்காக இசைக்குழு காவலர் (Band Police Constable) காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2027 மார்ச் மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சியுடன், குறிப்பிட்ட இசைக்கருவிகளை இயக்குவதில் தகுதி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
தமிழக இளைஞர்கள் மிக ஆவலோடு எதிர்பார்க்கும் பொதுத்தேர்வு (Common Recruitment) அறிவிப்பானது 2027 ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளது. இதன் மூலம் இரண்டாம் நிலை காவலர் (Gr.II Police Constable), இரண்டாம் நிலை சிறைக்காவலர் (Gr.II Jail Warder) மற்றும் தீயணைப்பாளர் (Fireman) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த பெருவாரியான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால், இதற்கான போட்டி எப்போதும் போல் மிகக் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக, 2027 ஆகஸ்ட் மாதத்தில் ஒருங்கிணைந்த தேர்வு (Joint Recruitment) அறிவிப்பு வெளியாக உள்ளது. இதன் வாயிலாக தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆகிய பிரிவுகளுக்கான காவல் சார்பு ஆய்வாளர் (Sub-Inspector of Police - Taluk, AR, TSP) பணியிடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் நிலைய அலுவலர் (Station Officer) பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் (Bachelor's Degree) பெற்ற பட்டதாரிகள் இந்த உயரிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இந்த முன்கூட்டிய திட்டமிடல், தேர்வர்கள் தங்களை தகுந்த முறையில் தயார்படுத்திக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும். தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnusrb.tn.gov.in/ பக்கத்தை தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















