தொழில் தொடங்கனுமா? 30 லட்சம் ரூபாய் வரை கடன் தரும் தமிழக அரசு - எப்படி வாங்குவது?
தமிழ்நாடு அரசு ரூபாய் 30 லட்சம் வரை வழங்கும் தனிநபர் கடன் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? எப்படி பெறுவது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழக அரசு தனது பல்வேறு துறைகளின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக பல்வேறு கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பில் செயல்படும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் 30 லட்சம் வரை சுயமாக தொழில் தொடங்க தனிநபர் கடன் வழங்குகிறது.
தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் 30 லட்சம் ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு சுயமாக தொழில்/ வியாபாரம் செய்யவும், கறவை மாடுகள் வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது.
இந்த கடன் திட்டம் இரண்டு வகைகளில் செயல்படுத்தப்படுகிறது. 20 லட்சம் ரூபாய் அளவில் ஒரு கடன் திட்டமும், 30 லட்சம் ரூபாய் அளவில் மற்றொரு கடன் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
ரூ.20 லட்சம் கடன் திட்டம் எப்படி?
இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூபாய் 20 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் 6 சதவீதம் வட்டி ஆகும். இந்த கடன் தொகையைப் பெறுவதற்கு அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானமாக இருக்க வேண்டும். இந்த கடன் தொகையை திருப்பிச் செலுத்த அதிகபட்சம் 5 ஆண்டுகள் அவகாசம் ஆகும்.
ரூ.30 லட்சம் கடன் திட்டம் எப்படி?
இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற ஆண்டு வருமானம் அதிகபட்சம் 8 லட்சம் ரூபாய் இருக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் ஆண்களுக்கு ஆண்டிற்கு 8 சதவீதமும், பெண்களுக்கு ஆண்டிற்கு 6 சதவீதமும் விதிக்கப்படும். அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை கடனைத் திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்கப்படுகிறது.
கடன் வாங்க என்னென்ன தகுதிகள்?
1. விண்ணப்பதாரர் மதவழி சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள், பார்சிகர், ஜெயினர்கள் ஆகியோர்களில் ஒருவராக இருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
3. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் வழங்கப்படும்.
அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
1. சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்
2.சாதிச் சான்றிதழ்
3. வருமானச் சான்றிதழ்
4. உணவு பங்கீடு அட்டை (அல்லது) இருப்பிட சான்றிதழ்
5. ஆதார் அட்டை
6. திட்ட அறிக்கை
7. வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள்
கடன் கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை மேற்கண்ட ஆவணங்களின் நகலுடன் அரசு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர்கள்/ மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகம்/ கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த கடனைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கும்.
1. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்/ மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம்
2. மண்டல கூட்டுறவுச் சங்கங்களில் இணைப்பதிவாளர் அலுவலகங்கள்
3. மாவட்ட/ மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கிடைக்கும்.
தொழில் தொடங்க விரும்பும் தகுதியான நபர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

