Kangana Ranaut on South Stars: பாலிவுட் உங்களை கெடுத்துடும்.. விட்ராதீங்க.. தென்னிந்திய கலைஞர்களுக்கு அட்வைஸ் சொன்ன கங்கனா..!
தென் இந்திய கலைஞர்கள் ஏன் இவ்வளவு தத்ரூபமாக ஆக்ரோஷமாக இருக்கிறார்கள் என்பதற்கு நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ள நடிகை கங்கனா ரனாவத், “ தென்னிந்திய கலைஞர்கள் அவர்களின் கலாச்சாரத்தில் வேரூன்றியவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தங்களின் குடும்பத்தினரை நேசிக்கிறார்கள். அவர்களின் உறவுகள் மரபு சார்ந்தவையாகவும், மேற்கத்திய மயமாக்கப்படாமலும் இருக்கிறது.
அவர்களது தொழிலும், ஆர்வமும் இணையற்றதாக இருக்கிறது. பாலிவுட் அவர்களை சிதைக்க அனுமதிக்க கூடாது. அத்துடன் அவர் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புஷ்பா மற்றும் கே.ஜி.எஃப் படத்தின் புகைப்படங்களையும் அவர் இணைத்துள்ளார்.
தென்னிந்திய மொழி திரைப்படங்கள் தற்போது தொடர்ச்சியாக ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறன. அந்த வகையில், அண்மையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான, புஷ்பா படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தாக யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும், கே.ஜி.எஃப் படமும், ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படமும் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில்தான் கங்கனா இப்படியான கருத்தை முன்வைத்துள்ளார்.
இந்தி திரையுலகில் அறிமுகமான நடிகை கங்கனா ரனாவத் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து நடித்திருமையால் பெரும் வரவேற்பைப் பெற்றார். மேலும் இவர் எப்போதுமே தனது மனதில் தோன்றுவதை சொல்லும் இயல்பு கொண்டதால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.
அந்த வகையில், பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி எனவும் இந்தியாவுக்கு 2014 ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது எனவும் 1947 ஆம் ஆண்டு கிடைத்தது பிச்சைதான் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதே போல, பஞ்சாப்பில் பயணத்தின் போது விவசாயிகளின் போராட்டத்தால் மோடி நிறுத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அவர், “பஞ்சாப்பில் நடந்தது அவமானகரமானது. பிரதமர் என்பவர் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர். அவர்160 கோடி மக்களின் குரல். அவர் மீதான தாக்குதல் என்பது ஒவ்வொரு இந்தியரின் மீதான தாக்குதல், பஞ்சாப் தீவிரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறிக் கொண்டிருக்கிறது. அவர்களை நாம் இப்போது தடுக்கவில்லை என்றால் தேசம் ஒரு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்தக்கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.