Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
Kirthika Shivkumar BJP Candidate: 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஆகப் போட்டியிடுகிறார் கிருத்திகா சிவக்குமார். யார் இவர்?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் 27 வேட்பாளர்களின் பெயர் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த முறை பாஜகவில் உள்ள 4 எம்எல்ஏக்களில் 3 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், மொடக்குறிச்சி சிட்டிங் எம்எல்ஏவான சரஸ்வதிக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
கொங்கு பகுதியில் போட்டியிட விரும்பிய அண்ணாமலைக்கு மொடக்குறிச்சி தொகுதியை பாஜக மேலிடம் அளிக்க விரும்பியதாகவும் கூறப்பட்ட நிலையில், இந்தத் தொகுதி கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஆகப் போட்டியிட உள்ளார் கிருத்திகா சிவக்குமார்.

யார் இந்த கிருத்திகா சிவக்குமார்? காணலாம்.
மொடக்குறிச்சி எம்எல்ஏவும் மருத்துவருமான சரஸ்வதியின் மகன் சிவக்குமாரின் மனைவி கிருத்திகா. அதாவது சரஸ்வதியின் மருமகள்தான் கிருத்திகா சிவக்குமார். இவர் தற்போது தமிழக பாஜகவின் தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆக உள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிருத்திகா சிவக்குமாருக்கு இந்தப் பதவி அளிக்கப்பட்டது.
பள்ளி, மருத்துவமனை நிர்வாக இயக்குநர்
அதேபோல சரஸ்வதியின் சி.கே. மெடிக்கல் சென்ட்டர் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநர் பொறுப்பை வகிக்கிறார். கூடுதலாக அறம் சாரிட்டி அறக்கட்டளையின் அறங்காவலர் பொறுப்பிலும் கிருத்திகா உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் டிப்ஸ் எனப்படும் ’தி இந்தியன் பப்ளிக் பள்ளி’யின் நிர்வாக இயக்குநராகவும் கிருத்திகா சிவக்குமார் உள்ளார். பெண் தொழில்முனைவோர் என்றும் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் கிருத்திகா, பொது வாழ்விலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மாமியார் சரஸ்வதியுடன் இணைந்து பல்வேறு ஆன்மிக, தொண்டு, வணிக, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஆற்றல் அசோக் குமார்
அதேபோல மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகன் ஆற்றல் அசோக் குமார். பாஜகவில் இருந்த அவர், அங்கிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு 2024 மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும் தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.





















