West Bengal Election Voting: மேற்கு வங்கத்தில் பட்டையை கிளப்பும் வாக்குப்பதிவு; 1 மணி நிலவரத்துலயே இத்தனை சதவீதமா.?
West Bengal Assembly Election 2026: மேற்கு வங்கத்தில், முதற்கட்ட வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வாக்களித்து வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை பார்க்கலாம்.

மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில், இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, இன்று முதல்கட்டமாக 152 தொகுதிகளிலும், வரும் 29-ம் தேதி இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு
திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்துவரும் மேற்கு வங்கத்தில், இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து பகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வாக்குப்பதிவில், மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வாக்களித்து வருகின்றனர்.
முதல் கட்டத்தில், மொத்தம் 3 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அதில், 1 கோடியே 84 லட்சம் ஆண்களும், 1 கோடியே 75 லட்சம் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 465 பேரும் வாக்களிக்கின்றனர்.
இந்த முதற்கட்ட தேர்தலில், 2,450 கம்பெனி, அதாவது 2 லட்சத்து 50 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் தீவிர கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62.18% வாக்குப்பதிவு
இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் 18.76 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, தற்போது 1 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பிற்பகல் 1 மணி வரை, மேற்கு வங்கத்தில் 62.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் இதைவிட அதிக அளவில் வாக்குகள் பதிவாகி வருகின்றன.
கடந்த 2011-ம் ஆண்டு, 35 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்திவிட்டு ஆட்சிக்கு வந்தார் மம்தா. அப்போது முதல், தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியை தக்க வைத்து வருகிறார். கடந்த 2021 தேர்தலில், 77 இடங்களை பாஜக கைப்பற்றிய நிலையில், மம்தாவின் கட்சி 215 இடங்களில் வெற்றி பெற்றது.
SIR பணிகளால் நீக்கப்பட்ட 89 லட்சம் போலி வாக்காளர்கள்
முன்னதாக, மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட SIR, அதாவது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, அம்மாநிலத்தில் 89 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
அதன் பிறகு, தற்போது முதல் முறையாக அங்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்



















