TVK Vijay: “கும்பலாக சுத்துவோம்.. ஐயோ அம்மான்னு கத்துவோம்” - விஜய் வாகனத்தின் பின்னால் விபத்தில் சிக்கிய தவெகவினர்!
தூத்துக்குடி விமான நிலையம் வந்த விஜய் அங்கிருந்து பரப்புரை மேற்கொள்ளும் வாகனம் மூலம் திருநெல்வேலி சென்றார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் அவரை பின்தொடர்ந்தனர்

திருநெல்வேலி விஜய் தேர்தல் பரப்புரை செய்ய வருகை தந்த நிலையில் அவரது வாகனத்தை பின் தொடர்ந்த தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முதல் முறையாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 233 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. சேலம் எடப்பாடி தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட அக்கட்சியின் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இப்படியான நிலையில் இன்னும் வாக்குப்பதிவுக்கு இரண்டு வார காலமே உள்ள நிலையில் விஜய் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அதன்படி ஏப்ரல் 8ம் தேதியான இன்று திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடிக்கு அவர் செல்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்து பரப்புரை மேற்கொள்ளும் வாகனம் மூலம் திருநெல்வேலியில் நிகழ்ச்சி நடைபெறும் கேடிசி நகர் புறநகர் நெடுஞ்சாலை பகுதிக்கு வருகை தந்தார்.
அப்போது அவரது வாகனத்தை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏழு இளைஞர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். முன்னதாக விஜய் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இதுபோன்று விபத்துக்கள் நடந்தது மிகப்பெரிய அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
சில நிமிடங்களில் நிகழ்ந்த விபத்து
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம் ஒரு நடிகரின் பின்னால் இளைஞர்கள் சென்று இறப்பதையும் அடிபடுவதையும் பார்க்க முடிகிறது. ஒரு மூத்த நடிகராக இந்த இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ரஜினி, “இளைஞர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். அடிபட்டால் அவர்களுக்கு தானே காயம் ஏற்படும். படிக்கும் நேரத்தில் படிப்பில் மட்டுமே சிந்தனையும் முழு கவனமும் இருக்க வேண்டும். அந்த நேரத்தை தவற விட்டு விட்டால் வாழ்க்கையில் கஷ்டப்படுவீர்கள். அதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். முதலில் உடல் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும். குடி போதை, கஞ்சா ஆகியவற்றுக்கு தயவு செய்து அடிமையாக வேண்டாம். அத்தகைய சகவாசம் உள்ள நண்பர்களிடம் பழக்கம் வைத்துக் கொள்ளாதீர்கள் என அறிவுரை செய்திருந்தார்.
அவர் சொல்லி சென்ற சில நிமிடங்களில் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தினர் விபத்தில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஒரு இளைஞர் உயிரிழந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் ஒவ்வொரு முறையும் தொண்டர்களுக்கு விஜய் செல்லும் வாகனத்தை பின் தொடரக் கூடாது என அறிவுரை வழங்கி வருகிறது. ஆனால் அதனை சற்றும் கேட்காத தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் விஜயைப் பார்க்கும் ஆவலில் சென்று விபத்தில் சிக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கீழே விழுந்து காயமடைந்த தொண்டர்கள் வாகனத்தில் விஜயை பின்தொடர்வதை விடுத்ததாக சொல்லப்படுகிறது.




















