Udhayanidhi vs EPS: உதய் Vs ஈபிஎஸ்: அரசியல் நாகரிகம் அடியோடு அழிகிறதா? தனிமனித, தரம்தாழ்ந்த தாக்குதல்கள் தேவையா?
Udhayanidhi Stalin vs EPS: உதய் Vs ஈபிஎஸ்: அரசியல் நாகரிகம் அடியோடு அழிகிறதா? தேர்தல் பிரச்சாரத்தில் தனிமனித, தரம்தாழ்ந்த தாக்குதல்கள் தேவையா?

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் களம் அனல்பறக்க தயாராகி வருகிறது. கொளுத்தும் வெயிலைக் காட்டிலும் அரசியல் களம் அதிகமாய்த் தகிக்கிறது.
அனைத்துக் கட்சிகளும் போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் தெருத்தெருவாய்ச் சென்று, தொண்டை போக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தனிமனிதத் தாக்குதல்களும் தரம் தாழ்ந்த விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
காலம் காலமாய்த் தொடரும் மலிவான விமர்சனங்கள்
கட்சிகளின் மூன்றாம்கட்ட, நான்காம் கட்டப் பேச்சாளர்கள் ஜனரஞ்சகமாகப் பேசுகிறேன் என்ற பெயரில், கைதட்டல்களை வாங்க பொது மக்களிடம் மலிவான விமர்சனங்களை முன்வைத்து காலம் காலமாக இருந்து வருகிறது. இது தவறு என்றபோதிலும் இத்தகைய நபர்களின் பேச்சுகள், பொதுவெளியில் பெரும் கவனத்துக்கு வந்ததில்லை.
’’பாதம் தாங்கி பழனிசாமி’’
ஆனால் தற்போது முதல்கட்டத் தலைவர்களே இத்தகைய போக்கில் ஈடுபடுவதைக் காண முடிகிறது. குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக விமர்சித்தார். குறிப்பாக, ''காலுக்கு அடியில் ஊர்ந்து செல்லும் நபர், பாதம் தாங்கி பழனிசாமி, முரட்டு அடிமை பழனிசாமி, தவளும் பிராணி’’ என்றெல்லாம் ஈபிஎஸ்ஸைக் கடுமையாகச் சாடி இருந்தார்.
இதற்கு அண்மையில் பிரச்சாரமொன்றில் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ’’நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் குதிக்கிறது, விமர்சனம் செய்கிறார் உதயநிதி’’ என்று பேசி இருந்தார்.

’’காலுக்கும் எடப்பாடிக்கும் அவ்வளவு பொருத்தம்’’
இதற்கு பதில் தந்த உதயநிதி, '’ஒருத்தரை திட்டும் போதுகூட கால் என்னும் வார்த்தை வரும்படியாகத் திட்டுகிறார். அவருக்கும் காலுக்கும் அவ்வளவு பொருத்தம். முதலில் ஜெயலலிதா அம்மாவின் காலில் விழுந்தார். அவர் இறந்த பிறகு சசிகலா அம்மாவின் காலில் விழுந்தார். அவர் சிறைக்குச் சென்றதும் டிடிவி தினகரன் கால். டிடிவியின் காலை வாரி விட்டுவிட்டு, ஓபிஎஸ் கால். அவரையும் கழற்றிவிட்டு, இப்போது டெல்லியில் மோடியின் காலில் விழுகிறார்’’ என்று பதில் தாக்குதல் தொடுத்தார்.
’’பால்டாயில் குடித்ததெல்லாம் பன்ச் டயலாக் பேசுது’’
அதேபோல எடப்பாடி பழனிசாமி மற்றுமொரு பிரச்சாரத்தில், ‘’இரவு 2 மணிக்கு உதயநிதி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை ரீபோஸ்ட் செய்கிறார். யார் காலைத் தேடி அவர் அவ்வாறு செய்கிறார் என்று எங்களுக்கு கேட்கத் தெரியாதா?
ஏற்கெனவே இப்படிப் போய்த்தான் பால்டாயில் குடித்தீர்கள். பால்டாயில் குடித்ததெல்லாம் பன்ச் டயலாக் பேசுது. அப்போதே மேல் லோகத்துக்குப் போயிருக்க வேண்டும். இங்கே இருந்துகொண்டு உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறது’’ என்று குறிப்பிட, பதிலுக்குப் பேசிய உதயநிதி, ’’உயிரை வாங்குகிறான் உதயநிதி என்று ஈபிஎஸ் பேசியிருக்கிறார். அவரின் உயிரை எடுக்கும் ஆசையெல்லாம் எனக்கு இல்லை, தயவுசெய்து பிபி மாத்திரை போட்டுக் கொள்ளுங்கள்’’ என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

இந்த இருவரின் பேச்சுகள் ஒரு சாம்பிள்தான். இன்னும் பல தலைவர்களின் பேச்சுகளைத் சேர்த்தால், பட்டியல் இன்னும் பெரிதாகும்.
ஒவ்வொரு கட்சியும் அதன் தலைவரும் ஆளும் கட்சியின் ஆட்சியில், நிர்வாகத்தில் என்னென்ன பிரச்சினை, குறை? என்ன ஊழல் நடந்திருக்கிறது? என்பதை விமர்சித்து, தாக்கிப் பேசலாம். ஆனால், தனிமனித விமர்சனங்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை.
இதை முதல்கட்டத் தலைவர்களே கருத்தில்கொள்ளாமல் மாறி மாறி தனிப்பட்ட வகையில் தாக்கிக் கொள்வது, மோசமான முன்னுதாரணமாக மாறி விடும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.





















