TVK Vijay: பிரச்னை வரும்.. ரெடியா இருங்க.. தொண்டர்களுக்கு விஜய் எச்சரிக்கை!
சமீபகாலமாக தன்னை சுற்றும் சர்ச்சைகளால் தொண்டர்கள் துவண்டு போயுள்ளனர் என்பதை விஜய் நன்கு அறிந்துள்ளார். அதனால் நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகப்படுத்தி சட்டமன்ற தேர்தலுக்கு எதிர்கொள்ளும் பணியை மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் நேர்காணலில் விஜய் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காண்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலை முதல்முறையாக அக்கட்சி எதிர்கொள்ளும் நிலையில் கள நிலவரத்தில் அதிக எதிர்பார்ப்பு கொண்ட கட்சியாக தவெக மாறியுள்ளது. திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்த விஜய் தொடர்ந்து சைலண்ட் மோடில் ஆரம்பத்தில் பயணித்து வந்தார். தேர்தல் நெருங்க நெருங்க களத்தில் இறங்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
விஜய்யை சுற்றி கரூர் சம்பவம், ஜனநாயகன் பிரச்னை, மனைவி விவாகரத்து வழக்கு, நடிகை ஒருவருடன் தொடர்பு என தொடர்ச்சியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையப் போகிறார் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் தான் கூட்டணி என்பதில் விஜய் உறுதியாக இருந்தார்.
இப்படியான நிலையில் முதற்கட்டமாக 60 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை உறுதி செய்த விஜய், இரண்டாம் கட்டமாக நேற்று 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேர்காணல் செய்து பட்டியலை உறுதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த 50 பேரையும் அவர் தேர்வு செய்து தான் பனையூருக்கு அழைத்து நேரில் வாழ்த்தும், அறிவுரையும், தைரியமும் வழங்கியதாக சொல்லப்படுகிறது.
சமீபகாலமாக தன்னை சுற்றும் சர்ச்சைகளால் தொண்டர்கள் துவண்டு போயுள்ளனர் என்பதை விஜய் நன்கு அறிந்துள்ளார். அதனால் தான் மகளிர் தின விழாவில் என் தனிப்பட்ட பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டாம் எனவும், அதனை நான் பார்த்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பனையூர் அலுவலகம் வந்த அந்த வேட்பாளர்கள் பிரமுகர்களிடம், இந்த சட்டமன்ற தேர்தலில் நாம் யாருடைய வாக்கையும் பிரிப்பதற்காக வரவில்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வந்துள்ளோம். அதேபோல் இந்த தேர்தலில் நமக்கு இவ்வளவு வாக்கு சதவிகிதம் இருக்கிறது என காட்டுவதும் எண்ணமில்லை. உங்களில் பலரை நானே நேரடியாக பார்த்து தேர்வு செய்திருக்கிறேன். நான் இந்த தேர்தலில் ஜெயித்தால் மட்டும் போதாது. நீங்களும் ஜெயிக்க வேண்டும். இன்னும் பல பிரச்னைகள் கடைசி நேரத்தில் கூட வரலாம். ஆனால் எல்லாவற்றையும் எதிர்கொள்வோம். தைரியமாக இருங்கள். புதிய வரலாற்றைப் படைப்போம். உற்சாகமாக செயல்படுவோம் எனவும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள விஜய் மார்ச் கடைசி வாரத்தில் இருந்து தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு தேர்தல் அறிக்கை, வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.




















