TVK Meeting: தவெக பிரச்சாரத்தில் பெண்கள் மீது பாட்டில் வீச்சு.. கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
வில்லிவாக்கத்தில் தவெக பரப்புரை கூட்டத்தில் பொதுமக்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கண்ணாடி பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு போட்டியாக தவெக இந்த முறை களமிறங்கியுள்ளது. தவெக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நிலையில், நேற்று முதல் தவெக தனது தீவிர பரப்புரையத் தொடங்கியுள்ளது.
கண்ணாடி பாட்டில்கள் வீச்சு:
வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் அக்கட்சியின் முக்கியமான நிர்வாகி ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். அவர் இன்று மாலை வில்லிவாக்கம் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அவருடன் அக்கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் நாஞ்சில் சம்பத், லயோலா மணி உள்பட பலரும் பங்கேற்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பெண்கள், இளைஞர்கள் உள்பட பொதுமக்கள் பங்கேற்றனர். அப்போது, அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து திடீரென கண்ணாடி பாட்டில்களை பொதுமக்கள் மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், கூட்டத்தில் இருந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சற்றுமுன் வில்லிவாக்கத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தின் போது, திமுக ஆதரவாளர்கள் பெண்கள் மீது கண்ணாடி துண்டுகள் மற்றும் பாட்டில்கள் வீசி அராஜகத்தில் ஈடுபட்டது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். pic.twitter.com/TRzikVVXog
— RamKumarr (@ramk8060) March 31, 2026
கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா:
வீசப்பட்ட பாட்டில்களின் உடைந்த கண்ணாடி துண்டுகளை கையில் வைத்துக் கொண்டு பேசிய ஆதவ் அர்ஜுனா, கண்ணாடி பாட்டில்கள் வைத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பாட்டிலை உடைத்து தூளாக்கி ஒரு பெண்ணின் தோளில் அடித்துள்ளார்கள். திமுக-வின் இந்த சதித்திட்டத்திற்கு நாங்கள் குரல் கொடுப்போம். காவல்துறையினர் கடுமையாக இப்போதே கண்டிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதே இடத்தில் உட்காருவோம். கிளம்பமாட்டோம்.
என்ன அராஜகம் நடக்கிறது? கண்ணாடி பாட்டில் விட்டு அடிப்பது ஜனநாயகமா? எவ்ளோதான் அடிப்பீங்க? நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். திருப்பி அடித்தால் தாங்க மாட்டீங்கள்? எங்கள் பெண்கள் மீது கை வைத்தால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். கண்ணாடி பாட்டிலை வீசியவரை கைது செய்யாவிட்டால் ஆதவ் அர்ஜுனா இங்கேயே உட்கார்ந்து இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விஜய் பரப்புரை ரத்து:
வீசப்பட்ட கண்ணாடி பாட்டிலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவிற்கு ஆதரவாக விஜய் வில்லிவாக்கத்தில் நேற்று பரப்புரையில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், போதிய பாதுகாப்பு வசதி அளிக்கப்படாத காரணத்தால் அவரது பரப்புரை ரத்து செய்யப்பட்டது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளை எதிர்த்து தனித்துப் போட்டியிடும் தவெக இந்த தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கியை பெறும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.




















