”சீமான் ஒரு 'யூடியூபர்'.. 2% ஓட்டுத்தான் வாங்குவார்” சி.டி.ஆர். நிர்மல் குமார் விமர்சனம்
சீமான் ஒரு பொறுப்பான அரசியல் தலைவரைப் போலச் செயல்படாமல், வெறும் யூடியூபர் போலத் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

தேர்தல் களத்தில் சீமான் ஒரு யூடியூபர் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு இந்த தேர்தல் 2 சதவீதம் தான் வாக்குகள் தான் கிடைக்கும் என்று தவெக நிர்மல் குமார் விமர்சித்தார்.
சூழ்ச்சிகளை முறியடித்து போட்டி:
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எடப்பாடி தொகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கழக வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினர் எந்தவிதமான அடிப்படை முகாந்திரமும் இன்றி திட்டமிட்டு ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர். இத்தனை சூழ்ச்சிகளையும் சட்டரீதியாக முறியடித்து, அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை உறுதி செய்திருப்பது கழகத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். ஆச்சரியப்படும் விதமாக, திமுக தரப்பு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தபோது, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.
காவல்துறை காட்டும் கெடுபிடிகள்
எங்கள் தலைவரின் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை முடக்க ஆளுங்கட்சி காவல்துறை மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாளை நடைபெறவிருக்கும் திருநெல்வேலி சுற்றுப்பயணத்திற்கு அனுமதி பெறுவதற்கே மிகுந்த போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. புதுக்கோட்டை மற்றும் தர்மபுரி உள்ளிட்ட பல பகுதிகளில் பிரச்சாரத்திற்கு முன்கூட்டியே அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தோம். ஆனால், தாங்கள் விண்ணப்பித்த உடனே, அதே தேதியில் முதலமைச்சரின் நிகழ்ச்சி இருப்பதாகத் தெரிவித்து அனுமதியை மறுப்பது அல்லது தேதியை மாற்றச் சொல்லி வற்புறுத்துவது போன்ற நடைமுறைகளை காவல்துறை தொடர்ந்து கையாள்கிறது. இத்தகைய தொடர் இடையூறுகளால் தலைவரின் சுற்றுப்பயணத் திட்டங்களை அடிக்கடி மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சீமானுக்கு 2% தான் கிடைக்கும்:
நாம் தமிழர் கட்சி குறித்து பேசிய நிர்மல் குமார், சீமான் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் ஒரு பொறுப்பான அரசியல் தலைவரைப் போலச் செயல்படாமல், வெறும் யூடியூபர் போலத் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். கள நிலவரப்படி சீமானுக்குப் பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றும், இந்தத் தேர்தலில் அவருக்கு அதிகபட்சம் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
வதந்திகளை நம்ப வேண்டாம்
தமிழக வெற்றிக் கழகம் குறித்து சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களைத் தொண்டர்களும் மக்களும் எந்தக் காரணத்திற்காகவும் நம்ப வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார். ஆளுங்கட்சியின் இத்தகைய தடைகள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளுக்குப் பணியாமல், கழகம் 234 தொகுதிகளிலும் மிகுந்த நம்பிக்கையுடனும் வலிமையுடனும் தேர்தலைச் சந்திக்கும் என்பதை அவர் திட்டவட்டமாகக் கூறினார்.





















