தஞ்சாவூர் கோட்டையை தகர்க்கும் தவெக – 50 ஆயிரம் வாக்குகளைக் கடந்து விஜய் சரவணன் அபார முன்னிலை
தஞ்சாவூர் தொகுதியில் தவெக வேட்பாளார் விஜய் சரவணன் வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறார்.

தஞ்சாவூர் தொகுதியில் 13 சுற்றுக்கள் முடிவில் த.வெ.க வேட்பாளர் விஜய் சரவணன் 52109 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று 62 மையங்களில் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 3 மையங்களில் நடந்து வருகிறது. தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளில் பதிவான வாக்குகள் தஞ்சாவூா் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியிலும், பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு பள்ளியிலும் எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை 8 மணி வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை அறைகளுக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது . முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. ஒவ்வொரு சுற்றுகள் வாரியாக எண்ணப்பட்டு முடிவுகள் சுற்றுகள் வாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் மதியம் 1 மணி அளவில் 13 சுற்றுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விஜய் சரவணன் 13 சுற்றுகள் முடிவில் 52109 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தி.மு.க வேட்பாளர் சண் ராமநாதன் 38687 வாக்குகளும், பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தம் 15681 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிருஷ்ணகுமார் 4772 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இன்னும் 10 சுற்றுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஒரத்தநாடு தொகுதியில் மதியம் 1 மணி நிலவரம்:
7 சுற்றுகள் முடிவில் தி.மு.க வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை
ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. மதியம் 1 நிலவரப்படி 7 சுற்றுகள் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க வேட்பாளர் வைத்திலிங்கம் 7 சுற்றுகள் முடிவில் முன்னிலையில் உள்ளார் . அவர் 26770 வாக்குகள் பெற்றிருந்தார். அதற்கு அடுத்த இடங்களில் த.வெ.க வேட்பாளர் டாக்டர் அரவிந்த் 19467 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் மா. சேகர் 12523 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமுருகன் 3316 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
திருவையாறு சட்டமன்றத் தொகுதி:
7 சுற்றுகள் முடிவில் தி.மு.க வேட்பாளர் துரை சந்திரசேகரன் முன்னிலை
தஞ்சாவூர், திருவையாறு , ஒரத்தநாடு தொகுதிகளில் பதிவான வாக்குகள் தஞ்சாவூா் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் திருவையாறு தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 7 சுற்றுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திருவையாறு தொகுதி தி.மு.க வேட்பாளர் துரை சந்திரசேகரன் 7 சுற்றுகள் முடிவில் 24168 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். த.வெ.க வேட்பாளர் மதி. மணிகண்டன் 19283 வாக்குகளும், அ.ம.மு.க வேட்பாளர் வேலு கார்த்திகேயன் 17507 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் துரை செந்தில்நாதன் 3020 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்



















