Aadhav Arjuna: விஜய் பரப்புரை ரத்துக்கு சென்னை போலீஸ் கமிஷனர்தான் காரணமா? ஆதவ் அர்ஜுனா அடுக்கிய குற்றச்சாட்டு!
சென்னையில் விஜய்யின் பரப்புரை 4 மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டதற்கு சென்னை காவல் ஆணையரின் அழுத்தமே காரணம் என்று ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் திமுக - அதிமுக - நாம் தமிழர் - தவெக- சசிகலா ராமதாஸ் கூட்டணி என 5 முனைப் போட்டி உருவாகியுள்ளது.
விஜய் பரப்புரை ரத்து:
தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் கட்சி தமிழக வெற்றிக் கழகம். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தவெக-விற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் கடந்த சில நாட்களாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால், சென்னையில் அவர் பரப்புரை செய்வது தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதும், ரத்து செய்யப்படுவதும் அரங்கேறி வருகிறது. இன்று விஜய் பரப்புரையில் ஈடுபட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விஜய் பரப்புரை ரத்து செய்யப்பட்டது. இதற்கு தவெக-வின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா இதுதொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்தை முடக்கும் செயல்களில் சென்னை மாநகர காவல் ஆணையர் தொடர்ந்து ஈடுபட்டுவருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
காவல் ஆணையர் அழுத்தம்:
நேற்று சென்னையில் கழகத் தலைவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மாலை 2 மணியிலிருந்து 6 மணிவரை அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் முதலில் நான்கு மணிநேரம் அனுமதி கொடுத்திருந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அழுத்தத்தாலும் மிரட்டலாலும் அடுத்த ஒருமணி நேரத்தில் அது ஒரு மணிநேரமாகக் குறைக்கப்பட்டது. கழகத் தலைவர் அவர்கள் பிரசாரம் செய்யக்கூடாது என்றே இதனைத் திட்டமிட்டுச் செய்துள்ளனர்.
தமிழக மக்களின் பேராதரவு பெற்ற ஒரு தலைவருக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் ஜனநாயக நிலை இங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது. நமது கழகத் தலைவர் அவர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள பேராதரவைக் கண்டு தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது தீயசக்தி திமுக. 'நமது தலைவரை எப்படியாவது முடக்கிவிட வேண்டும்; மக்களைச் சந்திக்காமல் செய்துவிட வேண்டும்' என்ற நோக்கத்தில் தேர்தல் நடத்தை விதிகளையும் ஜனநாயக உரிமைகளையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் மூலம் சதிச்செயல்களில் ஈடுபட்டுவருகிறது திமுக.
மக்களாட்சி:
ஏற்கனவே, இதனை தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து கழகத் தலைவர் அவர்கள் முறையிட்டுள்ளார். தொடர்ந்து, சட்டப்படி ஜனநாயக வழியில் நமக்கான பிரசார உரிமையை மீட்டெடுப்போம். நமக்கு எதிரான சதிச்செயல்களை முறியடிப்போம்.
அதிகாரத்துக்காக எந்த எல்லைக்கும் போகும் சர்வாதிகாரத்தனத்தில் இறங்கியுள்ள திமுக-வின் தீய செயல்களை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் மக்களாட்சி வாக்கு மூலம் அதற்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள்."
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
விஜய் பரப்புரைக்குச் செல்லும் இடங்களில் போதியளவு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், அவரது பரப்புரைக்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கப்படுவதாகவும் தொடர்ந்து தவெக குற்றம் சாட்டி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















