“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
தற்போது டோக்கன் வாக்குறுதியும் கொடுத்துள்ளனர். அதிலும் கமிஷன் அடிக்க பாக்குறாங்க. எனவே திமுக ஆட்சிக்கு மூடு விழா இன்னும் கூடிய விரைவில் நடைபெற உள்ளது - எடப்பாடி பழனிசாமி

பெயர் வைக்க நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது ஸ்டாலினுக்கே கொடுக்க வேண்டும் என்றும் பாட்டியை கூட தற்போது விட்டு வைக்காத பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதாகவும் ஜோலார்பேட்டையில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பிலும் கூட்டணி கட்சி சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் ஞானசேகர் மற்றும் ஜோலார்பேட்டை அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணி ஆகியோரை ஆதரித்து ஜோலார்பேட்டை பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் வீரமணி
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ”கடந்த தேர்தலின் போது சொற்ப வாக்குகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தோற்கடிக்கப்பட்டார். மேலும் இந்த தொகுதிக்கு அதிக சேவைகளை செய்துள்ளார். மேலும், வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்துரை மாவட்டமாக பிரிக்க அஸ்திவாரம் போட்டவர்.
ரூ.400 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அம்மாவின் ஆட்சியின்போது திருப்பத்துரை தனி மாவட்டமாக அறிவித்தோம். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் வீரமணி. அதேபோல அமமுக வேட்பாளர் ஞானசேகரும் எளிமையாக அனைவரிடமும் பழக்கக் கூடியவர். எனவே இருவருக்கும் உங்களுடைய வாக்குகளை செலுத்தி வெற்றி பெற செய்யுங்கள்.
பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை
மேலும், திருப்பத்தூரில் அதிக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகள் கஞ்சாவுக்கு அடிமையாகின்றனர். கஞ்சா விற்பனைக்கு துணை நிற்பவர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள். ஆதலால் சிந்தித்து வாக்களியுங்கள். தமிழகத்தில் கொடுமையான ஆட்சி செயல்பட்டு வருகிறது. அந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். தற்போது சிறுமி முதல் பெரியவர்கள் மற்றும் பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே திறமையற்ற முதலமைச்சர் நாட்டை ஆள வேண்டுமா? எனவே அதிமுக கூட்டணி கட்சியினருக்கு வாக்கு செலுத்துங்கள்” என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய இபிஎஸ், “திமுக ஆட்சி குடும்ப ஆட்சி, மேலும் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது. சிந்தித்து வாக்களியுங்கள். நான்கு அதிகார மையங்கள் தமிழ்நாட்டை ஆண்டு வருகிறது. ஒன்று ஸ்டாலின், மற்றொன்று உதயநிதி ஸ்டாலின், சபரீஸ்வரன் மற்றும் ஸ்டாலின் மனைவி துர்கா அம்மாள் ஆகிய நான்கு பேரும் அதிகாரம் மையங்களாக செயல்பட்டு தமிழகத்தை கூறு போட்டு விட்டு வருகின்றனர். திமுகவினர் கடந்த தேர்தலில் கொடுத்த நான்கில் ஒரு பங்கு கூட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதில், புதிய வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர்.
தற்போது டோக்கன் வாக்குறுதியும் கொடுத்துள்ளனர். அதிலும் கமிஷன் அடிக்க பாக்குறாங்க. எனவே திமுக ஆட்சிக்கு மூடு விழா இன்னும் கூடிய விரைவில் நடைபெற உள்ளது. தற்போதுள்ள ஆட்சி விளம்பர ஆட்சியாக செயல்பட்டு போட்டோ சூட் மட்டும் நடத்தி வருகின்றனர். பெயர் வைக்க நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது ஸ்டாலினுக்கே கொடுக்க வேண்டும்” என கடுமையாக தாக்கி பேசினார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சி அமைக்கப்பட்டால் ஜாதி வாரி கணக்கெடுப்பு செய்யப்படும், அத்தியவச பொருட்களின் விலை குறைக்கப்படும், என அதிமுகவின் வாக்குறுதிகளை கொடுத்து உரையை முடித்தார்.




















