Seeman Assets: அதிரவிட்ட சீமான்..! 25 ஏக்கர் 51 லட்சம் மட்டும்தானா? கணவருக்கு பேக்-அப்பாக வந்த மனைவி கயல்விழி
Seeman Affidavit TN Election 2026: காரைக்குடியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது மனைவி 25 ஏக்கர் நிலத்தை ரூ.51 லட்சத்துக்கு வாங்கியதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

TN Election 2026 Seeman Asset: 25 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.51 லட்சத்துக்கே வாங்குவது என்பது சாத்தியமற்றது என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சீமானின் வேட்புமனுவால் ஷாக்..!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அந்த வகையில் அவர் காரைக்குடி தொகுதியில் போட்டிடுகிறார். இதற்காக நேற்று அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதோடு, எதிர்பாராத விதமாக அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், அவருக்கான மாற்று வேட்பாளராக களமிறங்குவதற்காக சீமானின் மனைவி கயல்விழியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதில் அவர்களது அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்புகள் தொடர்பான பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தனது மனைவி கயல்விழி பெயரில் சுமார் 25 ஏக்கர் நிலம் வெறும் 51 லட்சத்துகே வாங்கப்பட்டதாக சீமான் குறிப்பிட்டு இருப்பது தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 ஏக்கர் ரூ.51 லட்சம் தானா?
சீமான் சமர்பித்துள்ள வேட்புமனுவில் தனது பெயரில் வேளாண்மை நிலம் ஏதுமில்லை என குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், மனைவி கயல்விழி பெயரில் விருதுநகர் மாவட்டம் காரியபட்டி வட்டத்தில் உள்ள நாங்கூர் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதியன்று 25.45 ஏக்கர் நிலத்தை வெறும் 50 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது அதன் மதிப்பு 51 லட்சம் ரூபாய் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பார்த்தால் ஒரு சதுர அடி வெறும் 4 ரூபாய்க்கும், ஒரு ஏக்கர் வெறும் 2 லட்ச ரூபாய்க்குமே வாங்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இன்றைய தேதிக்கு எந்த ஊரில் ஒரு ஏக்கர் வெறும் 2 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பதே பெரும்பாலானோரின் கேள்வியாக உள்ளது.

குறைந்தபட்சமே ரூ.10 லட்சம்..
கடைமடை கிராமங்களில் கூட ஒரு ஏக்கர் நிலம் இன்றைய தேதிக்கு, குறைந்தபட்சம் சுமார் 10 லட்சம் ரூபாய் வரையில் விலை கொண்டுள்ளது. அப்படி இருக்கையில் எப்படி 25 ஏக்கர் நிலத்தை வெறும் 51 லட்சத்துக்கு வாங்க முடிந்தது. இதில் ஏதோ சட்ட விதிமீறல்கள் உள்ளது என சீமானை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சட்டப்படி சீமான் குறிப்பிட்ட தொகையில் எந்த சிக்கலும் இல்லை என்பதே உண்மை. அதனையே அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளும் தெரிவிக்கின்றன.

அரசு இணையதளங்கள் சொல்வது என்ன?
பத்திரப்பதிவின்போது வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் என யாருமே சந்தை மதிப்பை குறிப்பிடுவதில்லை. மாறாக அரசு நிர்ணயித்த வழிகாட்டி விலைமதிப்பினையே குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசின் நிலப்பத்திர பதிவு தொடர்பான அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகி, சீமான் சமர்பித்த விவரங்களை உள்ளீடு செய்து தேடியதில், வி. நாங்கூர் கிராமத்தில் ஒரு ஏக்கரின் வழிகாட்டி விலை ரூ.2 லட்சமாக மட்டுமே உள்ளது. அதன்படி, 25.45 ஏக்கர் நிலத்தின் மதிப்பு வாங்கும்போது சுமார் 50 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மட்டுமே என சீமான் தனது உறுதிமொழிப்பத்திரத்தில் குறிப்பிட்டதில் எந்த தவறும் இல்லை.
ட்ரெண்டிங் செய்திகள்




















