"டிவிகேவுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" பெரம்பூரில் TVKவினர் பிரச்சாரம்- குழப்பத்தில் மக்கள்!
Tamil Nadu Assembly Election 2026: பெரம்பூர் தொகுதியின் பல பகுதிகளில் "TVK-வுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" எனத் தெரிவித்து சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

சென்னை பெரம்பூர் தொகுதியில், "டிவிகே (TVK) கட்சிக்கு கேமரா சின்னத்தில் வாக்களியுங்கள்" என மேற்கொள்ளப்பட்டு நூதனப் பிரச்சாரம் வாக்காளர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய தமிழக அரசியலில் டிவிகே எனப்படும் கட்சி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தையே குறிக்கிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் அக்கட்சிக்கு, மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இக்கட்சியினர் 234 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
பெரம்பூரில் களம் காணும் விஜய்
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்தச் சூழலில், பெரம்பூர் தொகுதியின் பல பகுதிகளில் "TVK-வுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" எனத் தெரிவித்து சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
TVK-வுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு
இதைப் பார்த்த பொதுமக்கள், நடிகர் விஜய்யின் கட்சி திடீரென ஏதேனும் இடைத்தேர்தல் அல்லது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறதா? அவர்களுக்குத் தேர்தல் ஆணையம், திடீரென கேமரா சின்னத்தை மாற்றி ஒதுக்கியுள்ளதா? என ஆச்சரியத்துடன் கேள்வியெழுப்பத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் விசாரித்த பின்னரே உண்மைக் காரணம் தெரியவந்தது. இந்த பிரச்சாரத்திற்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தவாகதான் டிவிகேவாம்
பண்ருட்டி எம்எல்ஏவான வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவராக உள்ளார். இவரின் கட்சி சுருக்கமாக டிவிகே என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலில் 170 தொகுதிகளில் போட்டியிடுவதாக வேல்முருகன் தெரிவித்து இருந்தார்.
இதைப் பயன்படுத்தி, தவாகவினர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கேமரா சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க முயன்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
திசைதிருப்பும் உத்தி
எனினும் இதுகுறித்து தவெகவினர் கூறுகையில், "பிரபலமான கட்சிகளின் பெயர்களையோ, சுருக்கெழுத்துகளையோ பயன்படுத்தி வாக்குகளைப் பெற நினைப்பது தேர்தல் களத்தில் வாக்காளர்களை திசைதிருப்பும் உத்தி" என்று குற்றம் சாட்டி உள்ளனர். இந்த திடீர் கேமரா சின்ன குழப்பத்தால் பெரம்பூர் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















