TN Election 2026: நாளைக்கு தேர்தல்! இணையத்தில் போட்டி போட்டி அரசியல் கட்சிகள் பரப்புரை!
Tamilnadu Election 2026: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் பரப்புரை நேற்றுடன் முடிந்த நிலையில், இணையத்தில் அரசியல் கட்சிகள் பரப்புரை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்று வாக்குச்சாவடிகளைத் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
இணையத்தில் சூடுபிடிக்கும் பரப்புரை:
நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், கட்சியினரின் பரப்புரை நேற்றே நிறைவடைந்தது.
வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் பரப்புரை நேற்று நிறைவடைந்தாலும், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியின் ஆதரவாளர்களும் தாெடர்ந்து தங்களது கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்து வருகின்றனர்.
போட்டி போட்டு பரப்புரை:
திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என ஒவ்வொரு கட்சியின் ஆதரவாளர்களும், கீழ் மட்ட நிர்வாகிகளும் மிகவும் தீவிரமாக இணையதளங்களில் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் ஆதரவளிக்கும் கட்சிக்கு சாதகமான கருத்துக்களையும், தாங்கள் எதிர்க்கும் கட்சிக்கு எதிராகவும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதை ஒவ்வொரு கட்சியின் ஆதரவாளர்களும் போட்டி போட்டு பரப்பி வருகின்றனர்.
மேலும், அரசியல் தலைவர்களின் கடந்த கால பேச்சுக்கள், செயல்பாடுகளையும் விறுவிறுப்பாக பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோக்களே இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தல் மிகப்பெரிய பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
தீர்மானிக்கப்போகும் இளம் தலைமுறை வாக்கு?
தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான விஜய் இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்குகிறார். அவர் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறார். ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும், எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கவும் களத்தில் குதித்துள்ளனர். தனக்கென தனி வாக்கு வங்கி வைத்துள்ள நாம் தமிழர் கட்சியினரின் வாக்கு வங்கி இந்த தேர்தலில் என்னவாகும்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த தேர்தலில் ஆட்சியை அமைப்பதில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் வாக்குகள் மிகப்பெரிய அளவில் பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிய ஏந்திய துணை ராணுவத்தினர் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்



















