TN Election 2026 : நானே உதயசூரியனாக மாறிவிட்டேன்! பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரை
"ஆயிரம் கைகள் கொண்டு மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது; திமுக தலைமையிலான மெகா கூட்டணியின் வெற்றி உறுதி" - பிரேமலதா விஜயகாந்த்

விழுப்புரம் : "ஆயிரம் கைகள் கொண்டு மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது; திமுக தலைமையிலான மெகா கூட்டணியின் வெற்றி உறுதி" என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஆவேசமாக பேசினார்.
திமுக வேட்பாளருக்கு ஆதரவு
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கௌதம சிகாமணியை ஆதரித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த வாகனத்தில் நின்றபடி தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், திமுக அரசின் சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் பட்டியலிட்டார்.
குடும்ப நட்பு குறித்து நெகிழ்ச்சி
பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது: "திருக்கோவிலூர் தொகுதிக்கும் எங்களுக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பு உண்டு. கேப்டன் விஜயகாந்த் குடும்பத்திற்கும், பொன்முடியார் குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகாலமாக நீடித்த நட்பு உள்ளது. பொன்முடி அமைச்சராக இருந்த காலத்தில் இந்தத் தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். அந்த வளர்ச்சிப் பணிகள் தடைபடாமல் தொடர வேண்டுமெனில், கௌதம சிகாமணிக்கு மக்கள் பேராதரவு அளிக்க வேண்டும்."
தேர்தல் வாக்குறுதிகள் - ஒரு பார்வை
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையை வெகுவாகப் பாராட்டிய பிரேமலதா, மகளிருக்கான திட்டங்களை முன்னிலைப்படுத்தினார், மகளிர் உரிமைத் தொகை பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு புரட்சிகரமானது. சுய உதவிக்குழுக்கள் பெண்களுக்கு ரூ. 5 லட்சம் மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு வழிவகுக்கும். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய இந்தத் திட்டங்களால் ஸ்டாலின் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பது உறுதி என அவர் குறிப்பிட்டார்.
"கூட்டணி தர்மம் காப்போம்"
தன்னுடைய பிரச்சாரப் பயணம் குறித்துப் பேசிய அவர், "தேமுதிக என்பது என்றும் கூட்டணி தர்மத்தை மதிக்கின்ற ஒரு கட்சி. இன்று நாள் முழுவதும் திமுக வேட்பாளர்களுக்காகவே களத்தில் இறங்கி வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறேன். சொல்லப்போனால், இன்றைய தினம் நான் ஒரு உதயசூரியனாகவே மாறிவிட்டேன். 23 கட்சிகளை இணைத்து ஸ்டாலின் அமைத்துள்ள இந்த மெகா கூட்டணி ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது," எனத் தெரிவித்தார்.
வெற்றி நிச்சயம்
முடிவில், "எதிர்க்கட்சிகள் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், ஆயிரம் கைகள் கொண்டு மறைத்தாலும் உதயசூரியனை யாராலும் மறைக்க முடியாது. திருக்கோவிலூரில் கௌதம சிகாமணியின் வெற்றி, ஸ்டாலின் மற்றும் கேப்டனின் வெற்றியாக அமையும்," என முழங்கித் தனது உரையை நிறைவு செய்தார். இந்த பிரச்சாரத்தின் போது திமுக மற்றும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















