பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது ஏன்? திமுகவை விமர்சித்து நிறைய பாதிக்கப்பட்டேன்.. இயக்குநர் பா ரஞ்சித் ஆதங்கம்
தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக வேட்பாளரான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு ஆதரவு தெரிவித்தது குறித்து இயக்குநர் பா ரஞ்சித் விளக்கமளித்துள்ளார்

திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் அண்மையில் பாஜகவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ள அதிமுக வேட்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டிருந்தார். தனது திரைப்படங்கள் மற்றும் உரைகளில் தொடர்ச்சியாக இந்துத்துவத்திற்கு எதிராக பேசிவரும் ரஞ்சித் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரித்தது சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. இதுகுறித்து நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த தலித் வரலாற்று மாத துவக்கவிழாவில் பா ரஞ்சித் விளக்கமளித்துள்ளார்.
வாழ்நாள் முழுதும் இந்துத்துவத்திற்கு எதிராக தான் நிற்பேன்
சமீபத்தில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நான் ஆதரவு தெரிவித்தேன். இதனைத்த் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பரவலாக விவாதம் நடந்தது. நேரடி விவாதம் ஒன்று நடந்தது மறைமுக விவாதம் ஒன்று நடந்தது. நான் ஏன் ஆதரவு தெரிவித்தேன் ஏன்று ஒரு தலித்திற்கு இயல்பாகவே ஒரு புரிதல் இருக்கும். குறிப்பாக பொற்கொடி அவர்கள் வெற்றிபெற்றால் தங்களுடைய பிரச்சனைகளை சரிசெய்ய முடியும் என்று அவர் நம்புவதால் அவர் நம்புவதால் அவருக்கு நான் ஆதரவு தெரிவித்தேன். ஆனால் உடனே நான் ஆதரவு தெரிவித்ததும் தலித் மக்களிடம் தவறான அரசியலை கொண்டு சேர்க்கும் என்று பேசத் தொடங்கினார்கள். அப்போது தான் உண்மையாகவே என்னுடைய குரலுக்கு ஒரு பவர் இருக்கு என்று நான் தெரிந்துகொண்டேன். என் மீது அக்கறையுள்ளவர்கள் சொல்லும் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். என் வாழ்க்கையில் ஒருபோதும் நான் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு எதிராக நான் இருக்கமாட்டேன். என் வாழ்நாள் முழுவதும் நான் இந்துத்துவத்திற்கு பாசிசத்திற்கு நான் எதிரியாக இருப்பேன் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
திமுகவை விமர்சித்ததால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்
கடந்த 10 ஆண்டுகளில் நான் எடுத்த அரசியல் நிலைப்பாட்டிற்காக நான் இருமுனை விமர்சனத்திற்கு உள்ளானவன் நான். கடந்த தேர்தலில் யார் வெற்றிபெற வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தேன். தலிகளுக்கு எதிராக நடந்த பல வன்முறைகளில் திமுகவின் நிலைப்பாட்டை தொடர்ச்சியாக விமர்சனத்தை முன்வைத்திருக்கிறேன். அந்த விமர்சனத்தை வைத்ததற்காக நான் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு தான் தெரியும். அதேபோல் இந்துத்துவத்திற்கு எதிராக நான் விமர்சனம் வைத்ததால் நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறேன். இதையெல்லாம் நான் யாரிடமும் வெளிப்படையாக பகிர்ந்துகொண்டது கிடையாது. ஏனால் இதை நான் வெளியே சொன்னால் அது உங்களை பாதிக்கும் என்பதால் நான் அதை சொல்வதில்லை. இந்த விமர்சனங்கள் எல்லாம் தற்காலிகமானது தான். நம்மைச் சுற்றி ஒரு கதையை உருவாக்குவார்கள். அதை எல்லாம் நான் கண்டுகொள்ளாமல் நம்முடைய வேலையை பார்க்க வேண்டும்.




















