Annamalai: போட்டியிட சீட் இல்லை.! "மே 4-க்கு அப்புறம் பேசுவோம்“; அதிருப்தியில் அண்ணாமலை.? பாஜகவில் நடப்பது என்ன.?
சென்னையில் பேசிய அண்ணாமலை, தேர்தலில் போட்டியிடாததற்கான காரணத்தை தெரிவிக்க மறுத்து, மே 4-ம் தேதிக்கு பிறகு பேசுவோம் என்று கூறினார். இதனால், அவர் அதிருப்தியில் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் 27 பேர் அடங்கிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், அண்ணாமலையின் பெயர் இல்லாதது, அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தேர்தலில் போட்டியிடாததற்கான காரணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்காமல், மே 4-ம் தேதிக்குப்பின் பேசுவோம் என்று கூறிவிட்டு சென்றார். இதனால், ஒருவேளை அவர் அதிருப்தியில் இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
“நான் ரேஸில் இல்லை“
சென்னையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் உத்தரவு பிறப்பித்த நிலையில், கேரளாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டிருந்த அண்ணாமலை இன்று காலை சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் போட்டியிடாததால், கட்சிக்காக எல்லா இடங்களிலும் பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்தார். அதனால், கடந்த 45 நாட்களாகவே தான் எந்த ரேஸிலும் இல்லை என்றும் தான் யாரிடமும் எதையும் கேட்கவில்லை, கேட்கவும் மாட்டேன் என்றும் அவர் கூறினார்.
தன்னுடைய வேலை, ஏப்ரல் 21-ம் தேதி மாலை பிரசார நேரம் முடியும் வரை பிரசாரம் மேற்கொள்வதுதான என்று அண்ணாமலை தெரிவித்தார்.
“எனக்கு வருத்தம் இருந்தது“
அண்ணாமலை போட்டியிடாததால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நாம் எல்லா சண்டைகளையும் ஒரே நேரத்தில் இழுத்துப்போட முடியாது என்பது தொண்டர்களுக்கு தெரியும் என்றும், ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சண்டை தான் போட முடியும், இந்த தேர்தலில் தன்னுடைய சண்டை என்பது தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மூலமாகத் தான் என்று விளக்கமளித்தார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது தனக்கு ஒரு சிறு வருத்தம் இருந்ததாக கூறிய அவர், தன்னை நம்பி பல வேட்பாளர்களை போட்டியிட வைத்ததாகவும், உதாரணத்திற்கு ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றோரை தானே தேர்தலில் போட்டியிடுமாறு கூறியதால் அவர்களும் போட்டியிட்டபோது, அவர்களின் பிரசாரத்திற்கு தன்னால் அவர்களுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஒதுக்க முடிந்ததாக வருத்தம் தெரிவித்தார்.
அதனால் அன்று தனக்கு பெரிய மனக்குறை இருந்ததாக கூறிய அண்ணாமலை, எத்தனையோ பாஜக வேட்பாளர்களுக்கு தன்னால் பிரசாரம் செய்ய முடியவில்லை என்றும், தான் கேட்டுக்கொண்டதற்காகவே அவர்கள் போட்டியிட்டதாகவும் கூறினார்.
ஆனால், இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் பிரசாரத்தில் தன்னால் இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், காலம் இருக்கிறது, காட்சிகள் மாறத்தான் போகிறது, நிறைய தேர்தல்கள் வரத்தான் போகிறது, அப்போது நான் போட்டியிடுவேன் என்று தெரிவித்தார் அண்ணாமலை.
இந்த தேர்தலில் தன்னுடைய சண்டை என்பது, தமிழ்நாடு முழுவதும் சென்று திமுகவின் தவறுகளை எடுத்துக்கூறுவதற்கு வலிமையாக பேச வேண்டும் என்றும், அதைத் தான் இன்று தன்னுடைய பொறுப்பாக பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“என்னுடைய பெயரே போகவில்லை என்றால் எப்படி சீட் கொடுப்பார்கள்.?“
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தமிழ்நாடு கோர் கமிட்டியிலிருந்தே ஒரு பெயர் மேலே போகவில்லை என்றால், பாஜக தலைமை எப்படி சீட் கொடுக்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார். அதே நேரத்தில், தான் போட்டியிடவில்லை, எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன் என்று தானே மேலிடத்திற்கு கூறியதாகவும் அண்ணாமலை விளக்கமளித்தார்.
மேலும், கட்சி பிரசாரம் செய்யுங்கள் என்று கூறும்போது, அவர்கள் மீது நான் எப்படி தவறு சொல்ல முடியும் என்றும் கேட்டார் அண்ணாமலை. மேலும, கோரிக்கையை ஏற்று, அதற்கு செவிசாய்த்து, மரியாதை கொடுத்ததற்காக நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
“மே 4-க்குப் பிறகு பேசுவோம்“
இதைத் தொடர்ந்து, எந்த காரணத்திற்காக போட்டியிடவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, மே 4-க்குப் பிறகு பேசுவோம் என்று கூறிவிட்டுச் சென்றார் அண்ணாமலை.
இதனால், ஒருவேளை அண்ணாமலை அதிருப்தியில் இருக்கிறாரோ என்றும் பாஜகவில் என்ன நடக்கிறது என்றும் தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இருக்கிறதா என்பது, அவர் சொன்னது போல், மே 4-க்குப் பிறகு தான் தெரியும்.




















