மேலும் அறிய

M.K.Stalin: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் கூட்டாட்சியே இருக்காது - முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்..!

M.K.Stalin: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஸ்டாலின் திருவாரூரில் பரப்புரை மேற்கொண்டார்.

இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் கூட்டாட்சித் தத்துவமே இருக்காது என திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

”பாஜக ஆடும் அழுகுனி ஆட்டம்”

தொடர்ந்து பேசுகையில், “”நானும் டெல்டாகாரன்” என்ற பெருமையோடு, சொந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன்! தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளை - வளர்ந்த திருவாரூர் - வென்ற தஞ்சாவூர் - உள்ளடங்கிய நாடாளுமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், நாகப்பட்டினம் தொகுதிகளுக்கு வந்திருக்கிறேன். உங்களில் ஒருவனாக - உங்களிடம் உரிமையோடு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். தலைவர் கலைஞர் அவர்களின் மகனாக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இந்தியாவின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுத கூடியிருக்கும், இந்த எழுச்சிமிகு பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்துள்ள அனைவருக்கும் வணக்கம்.

என் உரையைத் தொடங்குவதற்கு முன்பு, இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக மாநாடுபோல் ஏற்பாடு செய்திருக்கும் ஆற்றல்மிகு பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

இந்திய நாடாளுமன்றத்திற்கு, ஏப்ரல் 19-ஆம் தேதி முதல்கட்டமாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தஞ்சை தொகுதி வாக்காளர்கள் – நம்முடைய வெற்றி வேட்பாளர் முரசொலிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். முரசொலியைப் படித்து வளர்ந்தவன் நான். இன்றைக்கு முரசொலி என்ற பெயர் வைத்திருக்கும், வேட்பாளருக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். முரசொலி தலைவரின் மூத்த பிள்ளை! அந்த மூத்த பிள்ளைக்கு வாக்கு கேட்க, உங்கள் வீட்டுப் பிள்ளையான இந்த ஸ்டாலின் வந்திருக்கிறேன். ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றும் தம்பி முரசொலி, நாடாளுமன்றத்திற்கு செல்வது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது.

அதே மகிழ்ச்சியோடுதான், பகத்சிங் போன்ற விடுதலை வீரர்கள் நிறைந்த கம்யூனிஸ்ட் தோழர்களை ஒருங்கிணைக்கும் தோழமையின் இலக்கணம், அண்ணன் முத்தரசன் அவர்களின் ஆதரவு பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான தோழர் வை.செல்வராஜ் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று நாகை தொகுதி வாக்காளர்களைக் கேட்க வந்திருக்கிறேன்.

நடைபெற இருக்கும் தேர்தல் மிகமிக முக்கியமான தேர்தல். ஏதோ பா.ஜ.க., ஆட்சியை வீழ்த்துவதற்கான தேர்தலாக மட்டும் யாரும் இதை நினைத்துவிடக் கூடாது. இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்வதற்கான தேர்தல் இது! இந்தியாவின் மாநிலங்களை - மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை-எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால், பா.ஜ.க., இன்னொரு முறை ஆட்சிக்கு வரக் கூடாது. பா.ஜ.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது.

நாட்டில் ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது. நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது. இவ்வளவு ஏன், மாநிலங்களே இருக்காது. முதலில் நாம் எல்லாரும் இதை உணர வேண்டும். கண்ணுக்கு முன்னால் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டதைப் பார்த்தோம். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தார்கள். அங்கு இருக்கின்ற மக்களின் விருப்பத்திற்கு மாறாக யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். அரசியல் கட்சித் தலைவர்களையே, வீட்டுச் சிறையில் அடைத்தார்கள். முன்னாள் முதலமைச்சர்களும் இதற்குத் தப்பவில்லை. அங்கு சட்டமன்றம் கிடையாது. காஷ்மீருக்கு ஐந்து ஆண்டுகளாக தேர்தல் கிடையாது. இப்போதுகூட, ஜம்மு-காஷ்மீருக்குத் தேர்தல் அறிவிக்கவில்லை. இதுதான் பா.ஜ.க. பாணி, சர்வாதிகாரம்!

இந்த நிலைமை நாளை தமிழ்நாட்டிற்கும் ஏற்படலாம். ஏன், பா.ஜ.க., மீண்டும் வெற்றி பெற்றால் இதே நிலைதான் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படும். இது ஏதோ எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு மட்டுமல்ல. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கே இந்த ஆபத்து வரத்தான் செய்யும். 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாசிச பா.ஜ.க., இந்தியாவை எல்லா வகையிலும், மிகமோசமான வகையில் பாழ்படுத்திவிட்டது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் இருந்த எல்லாக் கட்டமைப்புகளையும் சிதைத்துவிட்டார்கள்.

இன்றைக்கு தினமணி நாளேட்டில் ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறார்கள்... அந்தத் தலையங்கத்தில், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களைப் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத அளவுக்கு கைது செய்து கொண்டிருப்பது ஒன்றிய ஆளுங்கட்சயின் உள்நோக்கத்துடன் கூடிய நடவடிக்கை. பல்வேறு வழக்குகளில் இருந்து விடுபட பா.ஜ.க.வுக்கு கட்சி மாறியவர்கள் மேல் சட்டம் தன் கடமையைச் செய்ய மறுப்பதற்குக் காரணம் என்ன?” என்று அடுக்கடுக்காக பல கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள்.

இந்தத் தலையங்கத்துக்கு அவர்கள் வைத்திருக்கும் தலைப்பு என்ன தெரியுமா? ”அழுகுணி ஆட்டம்!” எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், ஜனநாயகத்துக்கு விரோதமான அத்தனை செயல்களையும் செய்துவிட்டு, பா.ஜ.க. ஆடும் ஆட்டத்துக்குப் பெயர்தான், அழுகுணி ஆட்டம்!

தன் கையில் கிடைத்த அதிகாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தவறாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை அழிக்க முயல்வது மட்டுமல்ல, நாட்டையே நாசம் செய்துவிட்டார். இனியும் மோடி ஆட்சி தொடர்வது, தமிழ்நாட்டுக்கு அழிவு! இந்தியாவுக்கும் நல்லதல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நம்முடைய ”திராவிட மாடல்” ஆட்சி மக்கள் பணிகளை எல்லாம் எந்த தொய்வில்லாமல் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

உதாரணத்திற்கு, ஒன்று சொல்கிறேன். எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்கள் சைதாப்பேட்டையை சேர்ந்த ஒரு தாய்மார், “எனக்கு 58 வயது ஆனது, இதுவரைக்கும் யாருக்கும் கடிதம் எழுதியது இல்லை, என் வாழ்க்கையில் முதல் கடிதம் இது! நிறைய வருடமாக திருவண்ணாமலையில் இருக்கும் நிலத்துக்கு பட்டா வாங்க முடியாமல் தவித்தேன். முதல்வரின் முகவரிக்கு மனு அனுப்பிய 15 நாட்களில் எந்தவிதமான கஷ்டமும் இல்லாமல், பட்டா கிடைத்துவிட்டது” என்று நன்றி சொல்லி எழுதியிருக்கிறார்கள்!

இப்படி, எத்தனையோ நல்ல திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்… அதெல்லாம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான திட்டங்கள்! சிலவற்றை பற்றி மட்டும் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு, மாதா மாதம் 1000 ரூபாய் வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!

தமிழ்நாடு முழுவதும் 16 இலட்சம் குழந்தைகள் பசியில்லாமல் பாடம் படிக்க, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்! அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு வரும், உங்கள் மகள்களுக்கு, மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்! இன்னும் கூடிய விரைவில் ஆண் மாணவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்க இருக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம்!

வேலைக்குச் செல்லும் பெண்களின் சுமையைக் குறைத்து, அவர்கள் மாதம் தொள்ளாயிரம் ரூபாய் வரை சேமிக்க உதவியாக இருக்கும், விடியல் பயணத் திட்டம்! 26 இலட்சம் இளைஞர்கள் திறன்பயிற்சி பெற்ற, நான் முதல்வன் திட்டம்! இதில், தேர்தல் அறிக்கையில் சொல்லிய வாக்குறுதிகளை மட்டுமல்ல, சொல்லாத பல திட்டங்களையும் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாகத்தான், சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு, இலவச வீட்டுமனையும் வழங்கி, வீடு கட்டுவதற்கான தொகையை அவர்களின் வங்கிக் கணக்கிற்கே செலுத்தும் ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற திட்டத்தை இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

இந்தத் திட்டத்தில் அதிகமாக பயன்பெறப்போவது திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட மக்கள்தான்! இவ்வாறு, ஒவ்வொரு குடும்பத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையிலும், வெளிச்சம் பாய்ச்சும் விடியலைத்தான் நம்முடைய ”திராவிட மாடல்” அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு கடினமான நிதி நிலைமையிலேயே நம்மால் இவ்வளவு நல்லது செய்ய முடிகிறது என்றால், நம்முடைய கூட்டணி ஆட்சி ஒன்றியத்தில் வந்தால், இன்னும் என்னென்ன திட்டங்களைச் செய்வோம் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுச் சொல்லி இருக்கிறோம்.

சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாகச் சொல்கிறேன். இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகளிலும், வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் - வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்.

பெட்ரோல் – டீசல், கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-ல் இருந்து, 150 நாட்களாகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.ப் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

ஈழத் தமிழர்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். பயிர்க் காப்பீட்டுக்கு உழவர்கள் செலுத்த வேண்டிய பங்குத்தொகையை ஒன்றிய அரசே செலுத்தும். காவிரி – தாமிரபரணி – வைகை ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்படும். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், அலுவலகங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவது உறுதிசெய்யப்படும். வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு + 50 விழுக்காடு என்பதை வலியுறுத்தி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்.

மாவட்ட அளவில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் கொள்முதல் மற்றும் விற்பனைச் சந்தைகள் அமைக்கப்படும். பட்டுக்கோட்டை – மன்னார்குடி, பட்டுக்கோட்டை – தஞ்சை இடையே புதிய இரயில் பாதைகள் அமைக்கப்படும். திருவாரூரில் இருந்து மதுரை, திருச்செந்தூர், பழனி ஆகிய இடங்களுக்கு இரயில் சேவைகள் ஏற்படுத்தப்படும். திருவாரூர் – சென்னைக்கு இடையே, பகல்நேர இரயில் சேவை ஏற்படுத்தப்படும். பட்டுக்கோட்டை இரயில் வழித்தடத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் இரயில் மீண்டும் இயக்கப்படும். திருவாரூரில் தேசிய வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

நாகைப் பகுதியில் சரக்குப் பெட்டகத் துறைமுகம் அமைக்க ஆவன செய்யப்படும். மீனவர்களுக்கு வாழ்வாதார உதவித்தொகையாக இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நாட்களில் நாளொன்றுக்கு 500 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.

இவ்வாறு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் என்ன செய்யப்போகிறோம் – தமிழ்நாட்டுக்கு என்ன செய்யப்போகிறோம் – என்று நான் வெளியிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.

தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும், “சொல்வதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்!” இதுதான் வரலாறு! சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை செய்துகாட்டியிருப்பவன்தான், இந்த ”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!”

நேற்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்! ஆட்சிப் பொறுப்பு கையில் வைத்திருந்தபோது, மக்களுக்கு ஒன்றுமே செய்யாத பழனிசாமி - ஒன்றிய அரசில் பா.ஜ.க.-வுடன் சேர்ந்து, தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாமல், துரோகங்களை மட்டுமே செய்த பழனிசாமி – அவர் பங்கிற்கு ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அது தேர்தல் அறிக்கை அல்ல; பழனிசாமியின் பம்மாத்து அறிக்கை! அவரிடம் அதிகாரம் இருந்தபோது, ஒன்றிய அரசிடம் இருந்து உருப்படியாக எதையாவது பெற்றுத் தந்தாரா? பா.ஜ.க.-வின் பாதம் தாங்கியாக, உதவாக்கரையாக இருந்த பழனிசாமி, இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா?

’‘ஆளுநரை நியமிக்கும்போது, முதலமைச்சரின் ஆலோசனை பெற்று நியமனம் செய்ய வேண்டும்” என்று தி.மு.க. சொன்னதையே ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார்.

நான் கேட்கிறேன், பழனிசாமி அவர்களே… தி.மு.க. அரசுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறாரே ஆளுநர்… அவரைக் கண்டித்து ஒருநாளாவது ஒரு அறிக்கையாவது விட்டிருக்கிறீர்களா? இல்லையே!

அ.தி.மு.க. ஆட்சியில், ஆளுநர் ஆய்வுக்குச் செல்கிறேன் என்று புறப்பட்டபோது, அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது தி.மு.க.!

தொல்லை தருவதையே தன்னுடைய அன்றாடப் பணியாக வைத்திருக்கும் ஆளுநருக்கு எதிராக இப்போதும் உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று போராடுகிறது தி.மு.க.!

கை கட்டி - வாய் மூடி - முதுகு வளைந்து - பாதம் தாங்கும் பழனிசாமி அவர்களே…

உங்களுக்கு வீரவசனங்கள் தேவைதானா? மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை; அந்தச் சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. ஓட்டு போட்டதால்தான் அந்தச் சட்டமே இன்றைக்கு அமலுக்கு வந்திருக்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் வரக் காரணமாக இருந்துவிட்டு, ‘இலங்கை தமிழர்களுக்கான இரட்டைக் குடியுரிமை கொண்டு வருவோம்’ - என்று சொல்வதற்குப் பெயர் என்ன? பித்தலாட்டம்தானே!

அடுத்து ஒன்று சொல்கிறார்… ”மதுரையில் நிறுவப்பட இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்கப்படுமாம்!” - பழனிசாமி சொல்கிறார். ஆகா என்ன நாடகம் இது ஆகா என்ன நாடகம் இது!

பழனிசாமி அவர்களே… 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் திறப்பு விழாவில் மோடி பட்டன் அழுத்தியபோது பக்கத்தில் உட்கார்ந்து கை தட்டினீர்களே… அதற்குப் பிறகு எய்ம்ஸ் அமைக்காமல் ஏன் இழுத்தடிக்கிறீர்கள் என்று ஒரு முறையாவது ஒன்றிய அரசின் கதவைத் தட்டியிருப்பீர்களா?

இவ்வளவு ஆண்டுகளாக இது எதையுமே செய்யாமல் இப்போது வந்து நீங்கள் போடும் இந்த பகல் வேஷம் பா.ஜ.க.-வுக்கான பசப்பு நாடகம்தான் என்று மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்!

இங்கு இவர் இப்படி என்றால்,  ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 2014-ஆம் ஆண்டில் மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றினாரா? இல்லை!

கருப்புப் பணத்தை மீட்பேன், மீட்டு வந்து 15 இலட்சம் ரூபாய் வரை இந்தியர்களுக்குத் தருவேன் என்றார். தந்தாரா? 15 இலட்சம் வேண்டாம், 15 ஆயிரமாவது தந்தாரா? 15 ரூபாயாவது தந்தாரா? இல்லை!

இதைக் கேட்டால், உள்துறை அமைச்சர் பேட்டியில் சொல்கிறார். அது, 'சும்மா தேர்தலுக்காக கூறினோம்' என்று சொல்லி முடித்துவிட்டார்.

அடுத்து, ஒன்று கூறினார்கள்… ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று கூறினார்கள்.  வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா? இல்லையே!

படித்த இளைஞர்கள் 'பக்கோடா' விற்கலாம் என்று பிரதமர் பேசுகிறார்.

அடுத்து, விவசாயிகளுக்கு முக்கியமாக ஒன்று கூறினார்!

உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவேன் என்று கூறினார். ஆனதா? இல்லை!

  மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து உழவர்களின் வயிற்றில் அடித்தார்கள். இதெல்லாம் கூறியபோது, பாதம்தாங்கி பழனிசாமி என்ன கூறினார்? “விவசாயிகள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். நான் அவர்களுடன் விவாதம் நடத்தத் தயார்'' என்று கூறினார்.

'நானும் ஒரு விவசாயி' என்று பச்சைத் துண்டைப் போட்டுக்கொண்டு, பச்சைத் துரோகம் செய்தவர்தான் பழனிசாமி!

மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிராக ஒன்றரை ஆண்டு காலம் உழவர்கள் தலைநகர் டெல்லிக்கு வந்து போராடினார்கள்.  வெயிலிலும், கடும் குளிரிலும் படுத்திருந்த உழவர்கள் ஏராளமான பேர் பலியானார்கள். அவர்களை எல்லா வகையிலும் சித்திரவதை செய்தது பா.ஜ.க. அரசு.

இது எதற்கும் அஞ்சாமல், பின்வாங்காமல் அவர்கள் நின்றதைப் பார்த்துதான் மூன்று வேளாண் சட்டங்களை  இறுதியில் பா.ஜ.க. வாபஸ் வாங்கியது.

அப்போது ஒன்றிய பா.ஜ.க. அரசு உழவர்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால், அது எதையும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை.

அதனால் மீண்டும் டெல்லியில் உழவர்கள் போராட்டத்தைத் தொடங்கிவிட்டார்கள். டெல்லிக்குள் அவர்கள் நுழைந்துவிடுவார்களோ என்று பயந்து இரும்பு முள்வேலி, சாலைகளில் ஆணிப் படுக்கை அமைத்திருக்கிறது பா.ஜ.க. அரசு.

பாகிஸ்தான் பார்டரை விட, மோசமான சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதுவரை நான்கு உழவர்கள் இறந்துவிட்டார்கள்.

 இந்திய நாட்டுக்குள் ஆக்கிரமிப்பு செய்யும் நாடுகளைவிடச் சொந்த நாட்டு விவசாயிகள்தான் பிரதமர் மோடியின் கண்ணுக்கு எதிரிகளாகத் தெரிகிறார்கள்.

ஏழைத் தாயின் மகன் என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி ஆட்சியில் விவசாயிகள் நிலைமை இதுதான்.

தமிழ்நாட்டு உழவர்களையாவது நிம்மதியாக இருக்க விட்டாரா பிரதமர் மோடி? அதுவும் இல்லை.

காவிரி பிரச்சினையில் பா.ஜ.க.-வும் – அ.தி.மு.க.-வும் செய்த துரோகங்களை டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த உங்களால் மறந்திருக்க முடியாது.

காவிரியில் தமிழ்நாட்டு உரிமைகளுக்காகத் தலைவர் கலைஞர் எத்தனையோ செய்திருக்கிறார்… காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று, 1969-ஆம் ஆண்டு முதன்முதலாகக் குரல் கொடுத்ததில் இருந்து, காவிரி இறுதித் தீர்ப்பு வாங்கியது வரைக்கும், டெல்டா உழவர்களுக்காகத் தலைவர் பாடுபட்டது அத்தனையும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
Affordable Mileage Cars 2026: புத்தாண்டு பிறந்ததும் கார் வாங்கப் போறீங்களா.? குறைந்த விலை, நிறைந்த மைலேஸ் தரும் கார்கள் லிஸ்ட்
புத்தாண்டு பிறந்ததும் கார் வாங்கப் போறீங்களா.? குறைந்த விலை, நிறைந்த மைலேஸ் தரும் கார்கள் லிஸ்ட்
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Embed widget