Anbumani: ’’காலை தொட்டு கேட்கிறேன், திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க’’ அன்புமணி உருக்கம்
தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் காலைத் தொட்டு கேட்கிறேன். தயவுசெய்து திமுகவுக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள்- அன்புமணி.

வன்னியர்களும் பட்டியல் சமுதாய மக்களும் எதற்காக அடித்துக்கொள்ள வேண்டும? யாரும் யாருக்கும் எதிரி கிடையாது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மருத்துவர் அன்புச் சோழனை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஸ்டாலினுக்கும் டெல்டாவுக்கும் என்ன சம்பந்தம்?
திமுக வன்னியர்களையும், பட்டியல் சமூக மக்களையும், இஸ்லாமியர்களையும் ஆகிய உழைக்கும் சமூகத்தை சேர்ந்த மக்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டும் பார்க்கிறார்கள். கேட்டால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நானும் டெல்டாக்காரன் என்று சொல்கிறார். உங்களுக்கும் டெல்டாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? உங்க அப்பா இங்கிருந்து சென்னைக்கு போனார் அவ்வளவுதானே..
இன்றைக்கு இந்த டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தவர் இபிஎஸ். அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தது இந்த அன்புமணி.
கால் மீது கால் போட்டுக் கொண்டிருந்த பிரேமலதா
கூட்டணியில் இருக்கும் திருமாவளவனுக்கு அங்கு என்ன மரியாதை இருக்கிறது? சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் திருமாவளவன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துகிறார். ஆனால் பிரேமலதா எழுந்து நிற்காமல் கால் மேல் கால் போட்டு கொண்டு காலை ஆட்டிக்கொண்டு அமர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் முதலமைச்சர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும்போது பிரேமலதா எழுந்து நிற்கிறார். இதுதான் திருமாவளவனுக்கு திமுக கூட்டணியில் கிடைக்கிற மரியாதை.
அடுத்த மாதம் இபிஎஸ் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவது உறுதி, அப்போது சமூகநீதி நிலைநாட்டப்படும். அதாவது இட ஒதுக்கீடு கிடைக்காத பின் தங்கிய சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் வழங்கப்படும். அதிமுக ஆட்சி வந்த உடன் பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டை மூன்றாக அல்லது நான்காக பிரித்து சமூக நீதி அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுத்தது இபிஎஸ், அதை கெடுத்தது மு.க.ஸ்டாலின். வீராணம் ஏரியை சுற்றி இருக்கும் நிலத்தை என்எல்சி அபகரித்துக் கொண்டு அங்கு நிலக்கரி எடுக்க திட்டமிட்டார்கள். அதை தடுத்து நிறுத்தியவன் இந்த அன்புமணி ராமதாஸ். என்எல்சிக்கு எதிராக எத்தனை போராட்டங்களை இந்த அன்புமணி நடத்திருக்கிறான் என்பது உங்களுக்கு தெரியும். காரணம் இந்த மண்ணையும் மக்களையும் விவசாயத்தையும் நேசிப்பவன் அன்புமணி ராமதாஸ்.
காலைத் தொட்டு கேட்கிறேன்
தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் காலைத் தொட்டு கேட்கிறேன். தயவுசெய்து திமுகவுக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும்.
வன்னியர்களும் பட்டியல் சமுதாய மக்களும் எதற்காக அடித்துக்கொள்ள வேண்டும? யாரும் யாருக்கும் எதிரி கிடையாது. இரண்டு சமூகங்களும் ஏழ்மை நிலையில், குடிசை வீட்டில் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இந்த இரண்டு சமுதாயங்களை சேர்ந்த இளைஞர்களும் நன்றாக படிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும். கௌரவத்தோடு சுயமரியாதையோடு வாழ வேண்டும் இதுதான் இந்த அன்புமணியின் ஆசை.
இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்




















