விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? கேட்ட தொகுதியை முதல்வர் கொடுத்தாரா? - திருமாவளவன் பரபரப்பு பேட்டி
விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகளை முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் - திருமாவளவன்

"நாங்கள் விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “விசிக போட்டியிடும் 8 தொகுதிகளை இறுதி செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். திருப்திகரமான, சுமூகமான அளவில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தொகுதிகளை கண்டறிவதில் எந்த இழுபறியும் இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகளை முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். திமுக கூட்டணியில் பிரச்சனை எழாதா என எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் மீண்டும் மீண்டும் ஏமாறப்போகிறார்கள். ஒரு கட்சி கேட்கின்ற தொகுதிகளை இன்னொரு கட்சி கேட்கும்போது தாமதம் ஏற்படத்தான் செய்யும். இன்று இரவு அல்லது நாளை காலை அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை இறுதி செய்து முதலமைச்சர் அறிவிப்பார். தாமதம்பற்றி எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள்தான் கவலைப்பட வேண்டும். நாங்கள் வெற்றி பெறக்கூடாது என்று எண்ணுகின்ற கட்சிகள் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும். பானை சின்னம் கிடைக்காததால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறோம் ” என்று கூறினார்.




















