தரம் தாழ்ந்து விமர்சித்தால் திமுக குடும்பம் தாங்காது! – முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!
"திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; கும்பகோணம் மாவட்ட வாக்குறுதி என்னானது?" – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!

கும்பகோணம் : கும்பகோணம் சுவாமிமலையில் முருகப்பெருமானைத் தரிசனம் செய்த பின், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் முனைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும், தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
"கும்பகோணம் மாவட்ட வாக்குறுதி என்னவானது?"
2021 தேர்தலுக்கு முன்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதே கும்பகோணம் மண்ணில் நின்று 20 முறைக்கும் மேலாக ஒரு வாக்குறுதியை அளித்தார். "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்தை தனி மாவட்டமாகப் பிரிப்போம்" என்றார். ஆனால், ஐந்தாண்டு கால ஆட்சியில் ஒரு மாவட்டத்தைக் கூட திமுக அரசு பிரிக்கவில்லை என அன்புமணி சாடினார். "கடந்த அதிமுக ஆட்சியில் 6 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால் இப்போது மக்கள் ஒரு சான்றிதழ் வாங்கக் கூட கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் வரை அலைய வேண்டியுள்ளது," என அவர் வருத்தம் தெரிவித்தார்.
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற ஆட்சி
தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். "குழந்தைகளை வன்கொடுமை செய்து கொலை செய்யும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தமிழ்நாட்டை எத்தனையோ தலைவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள், ஆனால் இப்படி ஒரு மோசமான சூழல் நிலவியதே இல்லை," என்றார்.
"நானும் டெல்டா காரன் என்பது உலக மகா நகைச்சுவை"
முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை ஒரு 'டெல்டா காரன்' என்று கூறிக்கொள்வதைக் கடுமையாகச் சாடிய அன்புமணி, "இதுதான் உலகிலேயே மிகச்சிறந்த நகைச்சுவை. டெல்டா விவசாயிகள் இன்று மிக மோசமான நிலையில் உள்ளனர். முதலமைச்சரை ஒரு பொம்மை போல வைத்துக்கொண்டு, அவரைச் சுற்றியுள்ள நான்கு 'வியாபாரிகள்' மட்டுமே கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் உண்மையான நிலவரம் முதலமைச்சருக்குத் தெரியவில்லை," என விமர்சித்தார்.
இபிஎஸ் மீதான விமர்சனத்திற்கு எச்சரிக்கை
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசி வருவதாக அன்புமணி கண்டனம் தெரிவித்தார். "இபிஎஸ் மீதான தனிநபர் தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்களாலும் முதலமைச்சர் பற்றியும், திமுக குடும்பத்தைப் பற்றியும் பேச முடியும். ஆனால் தரம் தாழ்ந்து போகக்கூடாது என்பதற்காக அமைதியாக இருக்கிறோம். எல்லை மீறினால் நாங்களும் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருக்கும்," என எச்சரித்தார்.
"8000 ரூபாய் போலி கூப்பன் செல்லாது"
தேர்தல் நேரத்தில் திமுக கொடுக்கும் 8000 ரூபாய் கூப்பன்கள் மக்களை ஏமாற்றும் வேலை எனச் சாடிய அவர், "மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 8000 ரூபாய் கூப்பன் கொடுத்து மக்களை முட்டாளாக்க முடியாது. இந்த முறை திமுகவுக்கு எதிரான அலை பலமாக வீசுகிறது. அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, இபிஎஸ் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பார்," எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
டெல்டாவின் பாதுகாவலர் இபிஎஸ்
டெல்டா பகுதியை 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக' அறிவித்தது இபிஎஸ் தான் என்பதைச் சுட்டிக்காட்டிய அன்புமணி, இல்லையென்றால் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் டெல்டாவை நாசமாக்கியிருக்கும் என்றார். விவசாயியான இபிஎஸ்-க்குத் தெரிந்த விவசாயிகளின் கஷ்டம், ஸ்டாலினுக்குத் தெரியாது எனவும் அவர் கூறினார்.
ஐந்தாண்டு கால சாதனையைச் சொல்லி வாக்கு கேட்கத் துப்பற்ற நிலையில் திமுக உள்ளதாகவும், மக்கள் நிச்சயம் இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றும் கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















