ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
நமது 'விசில்' சின்னத்திற்கு வாக்களித்து புதுச்சேரியில் ஒரு விரல் புரட்சியை உருவாக்குங்கள்"

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தனது வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணிகளை கடுமையாகச் சாடினார்.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 9ந் தேதி தேர்தல் நடைபெற. உள்ளது. மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் விஜய் வருகையினால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் நாள் நெருங்கி விட்டதால் முக்கிய தலைவர்கள் புதுவையை நோக்கி வந்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.
இந்த நிலையில், புதுச்சேரியில் தவெக மற்றும் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் விஜய் நாளை பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால், போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு நாள் முன்னதாக இன்று பிரசாரம் செய்ய அனுமதித்தனர். தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி, கடலூர் சாலை மால், தவளைக்குப்பம் ஆகிய 3 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் பிரச்சாரம் செய்ய இன்று காலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து தவெக தலைவர் விஜய் சாலை மார்க்கமாக புறப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஜய் கார் சென்றுகொண்டிருந்தது. விஜய்யின் காரை பின்தொடரக்கூடாது என தவெக தலைமை உத்தரவிட்டிருந்த நிலையில், அதை கண்டுகொள்ளாமல் விஜய் காரின் மீதே ஏறி தவெகவினர் அலப்பறையில் ஈடுபட்டனர்.
மேலும், காரில் ஏறிய ஒருவர் கண்ணாடியில் முத்தம் கொடுத்துள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த விஜய்யின் பவுன்சர் காரின் மீது ஏறிய தொண்டர்களை அப்புறப்படுத்தினர். அதைத் தொடர்ந்து அவரது கார் புறப்பட்டு சென்றது. ஒரு இடத்தில் விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பலர் தொடர்ந்து வந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது லேசான தடியடி நடத்தி தடுத்து நிறுத்தினார்கள்.
விஜய்யை பார்ப்பதற்காக புதுச்சேரி மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கொளுத்தும் வெயிலில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விஜயை பார்ப்பதற்காக விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்தில் விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் காத்திருந்தனர். புதுச்சேரி எல்லையில் விஜய்க்கு நிர்வாகிள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து விஜய் திறந்த வேனில் நின்றபடி சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை பார்த்து கையை அசைத்து கொண்டே சென்றார்.
தட்டாஞ்சாவடியில் கூடியிருந்த மக்கள் மத்தியில் விஜய் பேசியதாவது:
புதுச்சேரியில் த.வெ.க. மற்றும் நேயம் மக்கள் கழம் (உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளில்) போட்டியிடுகிறது. நாம் மக்களோடு மக்களாக நிற்கும் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன். நம்முடைய அக்கா, அண்ணன், தம்பி ஆகியோரை நிறுத்தியுள்ளேன். அவர்களை வெற்றி பெற செய்யவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நம் வேட்பாளர்கள் எல்லோருக்கும் நம்ம விசில் சின்னத்தில் வாக்களியுங்கள். கூட்டணி கட்சிக்கு அவர்கள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நாம் புதுச்சேரியில் முதன் முதலாக போட்டி போடுகிறோம். இங்கு 2 கூட்டணி கட்சிகள் இருக்கிறது. நீங்கள் தனியாக வந்து என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு நாம் சொல்லவேண்டியது நமது கடமை.
இங்கு ஏற்கனவே உள்ள காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே இங்கு ஆட்சியில் இருந்தது. அதில் இருந்த தலைவர் ஒருவர் மக்களை மட்டும் ஏமாற்றவில்லை. அவர்களது தலைவரையே ஏமாற்றியதை உலகமே பார்த்தது. அதன்பின் அந்த கட்சி எந்தநிலைமையில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.
குழம்பி போன கூட்டணி
தி.மு.க.வும் ஆட்சியில் இருந்தார்கள். இப்போது இவர்களிடையே பெயருக்த்தான் கூட்டணி. கூட்டணி என்று சொல்லிக்கொண்டே 2 தொகுதிகளில் ஒருத்தரை ஒருத்தர் எதிர்த்து நிற்கிறார்கள். இங்கு குழம்பி போன அணியாக உள்ளது. மற்றொரு கூட்டணி என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி. அது சேர்ந்து இருக்கிற கூட்டணி இல்லை. சேர முடியாமல் சோர்ந்து இருக்கிறது கூட்டணி.
இங்கு இன்னொரு அரசியல் வியாபாரம் நடக்குது. தமிழ்நாடு போல இங்கு நம்மை பற்றி தவறாக சொன்னார்கள். நாம் தனித்து போட்டியிடுகிறோம். மக்களை நம்பி வா பார்த்துக் கொள்ளலாம் என்று உள்ளோம். இந்த 2 கூட்டணியினரும் ஆட்சியில் இருந்தவங்க தானே. புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரிக்கை எத்தனை ஆண்டுகளாக உள்ளது. அதனை காங்கிரஸ் அரசும் கொண்டுவரவில்லை.
20 வருஷமா சொல்லியும் யாரும் கொண்டுவரவில்லை. இதற்கு காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணியும், பா.ஜ.க. கூட்டணியும் பதில் சொல்வார்களா? நேரடியாக கேட்கிறோம். மனசாட்சி இருந்தால் ஏன் இந்த கோரிக்கையை இழுக்கிறீர்கள். இதை நாம் கேட்டால் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை என்று சொல்வார்கள்.
இதே போல் தான் ஒரு ரேஷன் கடை பிரச்சனை பற்றி நான் சொன்னேன். ஒரு வாதத்திற்கு சொன்னேன் என்று வைத்துக் கொள்வோம். விகடன் இணை தளத்தில் ஒரு பதிவு. அதில் 15 வருடத்திற்கு முன்பே ரேஷன் கடையில் மைதா, கோதுமை உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் நிறுத்தப்பட்டது. அரிசி மட்டும் வழங்கப்பட்டது.
அதுவும் 2016ம் ஆண்டு கவர்னராக இருந்த கிரேண் பேடி இங்கு மோசடி நடப்பதாக கூறி அரிசிக்கு பதிலாக பணம் கொடுத்தார்கள். வாடகை கட்டிடத்தில் இருந்த ரேஷன் கடைகளுக்கு வாடகை தராததால் பூட்டப்பட்டது. ஆங்காங்கே பள்ளிகளில் வைத்து அரிசி வழங்கப்படுகிறது. அதுகூட இப்பதான் கொடுக்கிறாங்க. ரேஷன் கடை ஊழியர்களுக்கு 5 வருடமாக சம்பளம் தரவில்லை என்று. விஜய் தெரியாமல் சொல்கிறார் என்று சொன்னார்… விகடன் பதிவுக்கு அந்த மாண்புமிகு மனிதர்கள் பதில் சொல்வார்களா?
தேர்தல் என்பது என்ன? பரீட்சையா?
தேர்தல் என்பது என்ன? பரீட்சையா? பரீட்சை கூட கஷ்டம் இல்ல. தேர்தல் என்பது மக்கள் சம்பந்தப்பட்டது. மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல தைரியம் வேண்டும். ஏற்கனவே அரசியலில் உள்ளவர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. கூட்டணி அது இது என்று சொல்லி மக்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள். மக்கள் சார்பாக நாங்கள் கேட்டால் கோபப்படுகிறார்கள்.
மக்களே இந்த ஏமாற்றும் கூட்டணிக்கும், பொருந்தா கூட்டணிக்கும் ஓட்டு போட்டு ஏமாந்துவிடாதீர்கள். சிறுபான்மை உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வேண்டும். சிறுபான்மை பாதுகாப்பு என்று வேஷம் போடுபவர்களை நம்பாதீர்கள். புதுச்சேரி மக்களே காங்கிரஸ் கட்சியும் சரி, பா.ஜ.க. கூட்டணியும் வேண்டாம்.
மக்களுக்காக மக்களுடன் இருக்கிற நமது த.வெ.க. வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுங்கள். உங்கள் விஜய்க்கு ஓட்டுபோடுவதாக நினைத்து போடுங்கள். உங்கள் தேவைகள் நிறைவேற த.வெ.க. துணை நிற்கும். எங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். உங்கள் விஜய் உங்களுக்கு துணை நிற்பான். தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சிதான் அமையும். புதுச்சேரியில் நம்ம ஆட்சிதான் அமைய வேண்டும். புதுச்சேரி மக்களின் தேவைகள் நிறைவேற நம்ம வெற்றி சின்னமான விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள். ஒரு விரல் புரட்சியான விசில் புரட்சியை புதுச்சேரியிலும் உருவாக்குங்கள்.
வாக்குறுதிகள்
- துணை நிலைய ஆளுநரின் தலையீடு இல்லாத மாநில அந்தஸ்து பெற சட்டப்படி 100% முயற்ச்சிப்போம்.
- த.வெ.க. ஆட்சி அமைந்ததும் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படும்.
- 25 ஆயிரம் ரூபாய் மகப்பேறு உதவித் தொகை வழங்கப்படும்.
- மீன்பிடிக்க செல்பவர்களுக்கு டீசல் மானியம் லிட்டருக்கு ரூ. 20 வழங்கப்படும்.
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
- வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.
- புதுச்சேரி மாநில பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
- காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் 25% வளர்ச்சி செலவினங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.
உங்கள் விஜய்க்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். புதுச்சேரி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.




















