2026 சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் அதிரடி உயர்வு! எவ்ளோ தெரியுமா?
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் பணிகளில் ஈடுபடும் தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளதாக, தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்படி தேர்தல் பணியாளர்களுக்கு அவர்களின் பணிநிலைகளுக்கு ஏற்ற வகையில் ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு, புதிய ஊதியம் 3 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக வாக்கு எண்ணும் உதவியாளருக்கு புதிய ஊதியம் 1,400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினருக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி 28.03.2026 மற்றும் 29.03.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இப்பயிற்சித் திட்டத்தில், 3,32,231 அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள், பங்களிப்புகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பாடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.
எதற்காக இந்தப் பயிற்சித் திட்டம்?
தேர்தல் தொடர்பான பணிகளைத் திறம்பட நிர்வகிப்பதற்கான அவர்களின் திறனை வலுப்படுத்தவும், நடைமுறைகளைச் சரியாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும், சட்டத்திற்கு உட்பட்டு 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் மற்றும் வெளிப்படையாகவும் நடத்துவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதே இந்தப் பயிற்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், வாக்கு எண்ணும் உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு (Micro Observers) வழங்கப்பட வேண்டிய ஊதிய விகிதங்களை இந்திய தேர்தல் ஆணையம் பின்வருமாறு உயர்த்தியுள்ளது.
| பதவி | பழைய ஊதியம் (.ரூ) | திருத்தப்பட்ட புதிய ஊதியம் (ரூ.) |
| வாக்குச்சாவடி தலைமை அலுவலர் | Rs.1700 | Rs.3000 |
| வாக்குப்பதிவு அலுவலர் | Rs.1300
| Rs.2600 |
| வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் | Rs.850 | Rs.1500 |
| வாக்கு எண்ணும் உதவியாளர் | Rs.650 | Rs.1400 |
| நுண் பார்வையாளர் | Rs.1000 | Rs.2000 |
அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24x7 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இக்குழுக்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள் (தங்கம்/ வெள்ளி), இதர பொருட்கள்/ இலவசங்கள் என ஏராளமான பொருட்களைக் கைப்பற்றி உள்ளன.
இதன் மொத்த மதிப்பு 300 கோடி ரூபாய்க்கும் மேல் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















