Puducherry Election 2026: காரைக்காலில் வாக்குப்பதிவின் போது பரபரப்பு: விவிபேட் (VVPAT) இயந்திரத்தில் திடீர் தீ - வாக்குப்பதிவு பாதிப்பு.
Puducherry Election 2026: காரைக்கால் தெற்கு தொகுதி கொத்துக்குளம் வாக்குச்சாவடியில் விவிபேட் (VVPAT) இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 30 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

காரைக்கால்: புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலை ஒட்டி காரைக்கால் மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 181 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில், காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
வாக்குபதிவு மையத்தில் கிளம்பிய புகை
காரைக்கால் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொத்துக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 27/14 எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இப்பள்ளியில் வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களித்து வந்தனர். இந்நிலையில், திடீரென விவிபேட் (VVPAT) இயந்திரத்தில் உள்ள பேட்டரி பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கியது.
வாக்குப்பதிவு அறைக்குள் திடீரென புகை வந்ததைக் கண்ட வாக்காளர்களும், அங்கிருந்த தேர்தல் முகவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீயணைப்புத் துறையினர் மற்றும் அதிகாரிகள் அதிரடி
தகவல் அறிந்தவுடன் வாக்குச்சாவடி மைய அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு, புகை வந்த விவிபேட் இயந்திரத்தை மையத்திலிருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பேட்டரியில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைத்துக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து தேர்தல் துறை அதிகாரிகள் இயந்திரத்தை ஆய்வு செய்தபோது, உள்ளே இருந்த பேட்டரியில் ஏற்பட்ட அதித வெப்பம் காரணமாகப் புகை உருவானது உறுதி செய்யப்பட்டது.
மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பூஜா உடனடியாகக் கொத்துக்குளம் வாக்குச்சாவடிக்கு விரைந்து வந்தார். அங்கு பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்களிடம் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், வாக்காளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த அவர், மாற்று ஏற்பாடுகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
வாக்குப்பதிவு மீண்டும் தொடக்கம்
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த மையத்தில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருச்சி பெல் (BHEL) நிறுவனப் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பழுதடைந்த விவிபேட் இயந்திரத்தின் பேட்டரியை முறையாக மாற்றி, இயந்திரத்தை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தனர். பழுது நீக்கப்பட்டதை அடுத்து, சுமார் 10 நிமிட சோதனைக்குப் பிறகு மீண்டும் வாக்குப்பதிவு தடையின்றித் தொடங்கியது.
இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரைக்கால் பகுதியில் சிறிய பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு தேர்தல் பணிகள் சுமுகமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தேர்தல் புள்ளிவிவரங்கள்: ஒரு பார்வை
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1,56,250 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் எவ்வித இடையூறுமின்றி வாக்களிக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் 181 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவிற்காக மொத்தம் 775 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பெண் வாக்காளர்களைக் கவரும் விதமாகவும், 100% பெண் வாக்குப்பதிவை ஊக்குவிக்கவும், முழுமையாகப் பெண்களாலேயே நிர்வகிக்கப்படும் 5 பிங்க் (இளஞ்சிவப்பு) வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.





















