சிதறும் எதிர்க்கட்சிகள்... சீறும் பா.ஜ.க. ! புதுவையில் மோடி நடத்தப்போகும் 'மெகா' ரோடு ஷோ!
ஏப்ரல் 3ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி 'ரோடு ஷோ'வில் பங்கேற்கிறார். நிகழ்வின் மூலம் வேட்பாளர்களைப் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) வேட்பாளர்களை ஆதரித்து, வரும் ஏப்ரல் 3-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியில் பிரம்மாண்ட 'ரோடு ஷோ' நடத்தி வாக்கு சேகரிக்க உள்ளதாகப் பா.ஜ.க. மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
என்.டி.ஏ (NDA) வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரியில் ஏப்ரல் 3-ந்தேதி பிரதமர் மோடி ரோடு ஷோ
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக மறைமலையடிகள் சாலையில் பிரத்யேக 'ஊடக மையம்' (Media Centre) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை புதுச்சேரி மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி. ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டப்பேரவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் வி.பி. ராமலிங்கம் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) புதுச்சேரியில் மிகவும் பலமாக அமைந்துள்ளது. எவ்விதக் குழப்பமும் இன்றி தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால், எதிர்க்கட்சிக் கூட்டணியில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையே யார் தலைமை ஏற்பது என்பதில் இன்னும் அதிகாரப் போட்டி நிலவி வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் தேர்தல் ஆணையத்தால் முறையாக ஏற்கப்பட்டுள்ளன. இது எங்களுக்குப் பெரிய பலமாகும்.
பிரதமர் மோடியின் வருகை:
கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் மாதம் 3-ந்தேதி புதுச்சேரிக்கு வருகை தருகிறார். புதுச்சேரி நகரப் பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள 'ரோடு ஷோ' (Road Show) நிகழ்வில் அவர் பங்கேற்கிறார். அப்போது கூட்டணி வேட்பாளர்களைப் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரிப்பார்.
பிரதமர் வருகைக்கு முன்னதாக, மார்ச் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் நிதின் நபின் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் புதுச்சேரிக்கு வரவுள்ளனர். அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவார்கள். இவ்வாறு வி.பி. ராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
புதுச்சேரியில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 16-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24-ந் தேதி நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் 30 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை (வியாழக்கிழமை) மாலை வெளியிடப்பட இருக்கிறது.




















