"டாஸ்மாக்கை உடைச்சு கொளுத்திட்டு ஜெயிலுக்கு போனேன்.." பெண்கள் மத்தியில் பாமக வேட்பாளர் ஆவேசம்
டாஸ்மாக் மதுபான கடையை உடைத்து கொளுத்தி சிறைக்குச் சென்றேன் என்று பாமக வேட்பாளர் திலகபாமா பெண்கள் மத்தியில் பேசி வாக்கு சேகரித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே தமிழ்நாட்டில் இருப்பதால் ஒவ்வொரு கட்சியினரும் மிகவும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதி அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
பெரம்பூரில் கடும் போட்டி:
தவெக தலைவர் விஜய், திமுக வேட்பாளர் ஆர்டி சேகர் மற்றும் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாமக வேட்பாளர் திலகபாமா ஆகியோரிடம் தீவிர போட்டி நிலவி வருகிறது. இந்த தொகுதியில் அனைத்து கட்சியினரும் தினசரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
டாஸ்மாக் கடையை கொளுத்தினேன்:
இந்த தொகுதியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திலகபாமா வாக்காளர்கள் மத்தியில் பேசும்போது, காவல்துறையினர் சொல்றாங்க. அது அரசாங்க சொத்து. உள்ளிருக்கும் பாட்டீலும், டாஸ்மாக்கடையும் அரசாங்க சொத்து என்றார்கள். என்ன செய்தோம். கடையை உடைத்து தீ வைத்து கொளுத்திட்டு வெளியில் வந்துட்டேன்மா.
15 நாள் சிறையில் இருந்து வந்தேன். சிறையில் எனக்கு ஜாமின் கொடுக்கக்கூடாது என்பதற்காக ஒரு ஆள் மண்டையை உடைத்தேன் என்று பொய் வழக்கு போட்டு அந்த ஆளை மருத்துவமனையிலே வைத்துப் பார்த்துக் கொண்டார்கள். அப்படி வெளியில் வந்தேன். டாஸ்மாக் கடையில குடித்து போதை ஏறவில்லை என்று இருக்கிறார்கள். பெற்ற வயிறு எப்படி இருக்கும்?
இவ்வாறு அவர் பேசினார்.
பெண்கள் ஆதங்கம்:
அப்போது, அங்கே அவரிடம் பேசிய வயதான பெண் ஒருவர் மதுபானக் கடைகளால் ஏற்படும் சிரமங்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினார். மதுபானக் கடைகளுக்கு எதிராக பாமக நடத்திய போராட்டம் ஒன்றில் டாஸ்மாக் கடையை சேதப்படுத்தியதாக திலகபாமா மீது வழக்கு ஒன்று பதியப்பட்டு இருந்தது. இதைத்தான் இவர் தற்போது தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய வருவாய் தரும் இடமாக அரசு மதுபானக் கடைகள் உள்ளது. அரசு மதுபானக் கடைகளில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலமாகவே அரசு ஊழியர்கள் சம்பளம் உள்பட பல தமிழக அரசின் செலவுகளுக்கு பணம் செலவிடப்பட்டு வருகிறது.
மதுபானக் கடைகள் மூலம் வருவாய்:
இதுதவிர, தமிழ்நாட்டின் மதுபானக் கடைகளுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் பல நிறுவனங்களும் மிகப்பெரிய அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது என்ற குற்றச்சாட்டும் நீண்ட நாட்களாக உள்ளது. மதுபோதையில் பல்வேறு குற்றச்சம்பவங்களும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் மிகவும் கொடூரமான சம்பவங்களும் அரங்கேறி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















