TN Election: ”ஆமா, அதிமுக தொகுதிகளை தான் கேட்கிறோம்” BJP ஓபன் டாக், தாமரை Vs இரட்டை இலை? சிக்குவது யார்?
TN Election 2026 BJP NDA: அதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகளை பாஜக கேட்பதில் தவறில்லை என, அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

TN Election 2026 BJP NDA: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்ததும் அனைத்து விஷயங்களும் இறுதி செய்யப்படும் என, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. தாமதமாக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுகவே, சில முக்கிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட்டது. ஆனால், கடந்த ஆண்டே கூட்டணியை உறுதி செய்த அதிமுக - பாஜக கூட்டணியில் இதுவரை எந்தவொரு கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கு அதிமுக வலுவாக உள்ள சில தொகுதிகளை தங்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என, பாஜக வலியுறுத்துவதே காரணம் என கூறப்பட்டது. இதே சூழலில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய, எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். இந்நிலையில், தான் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து, கூட்டணி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
”ஆமா, ஒரே தொகுதிகளை தான் கேட்கிறோம்”
நயினார் நாகேந்திரன் பேசுகையில், மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் அடுத்த இரண்டு நாட்களில் சென்னைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வந்ததும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அதன் பிறகு கூட்டணி தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் அனைத்தும் இறுதி செய்யப்படும்” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அதிமுக போட்டியிட விரும்பும் அதே தொகுதிகளை பாஜக கேட்பதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு, “கூட்டணியில் ஒரு கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளை மற்றொரு கட்சியும் கேட்பதில் தவறு ஏதும் இல்லை” என பதிலளித்துள்ளார். இதன் மூலம், அதிமுக வலுவாக உள்ள தொகுதிகளை தங்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என பாஜக நிர்பந்திப்பதாக வெளியான தகவல் கிட்டத்தட்ட உண்மையாகியுள்ளது. இதுகுறித்து தெளிவாக பேசவே, நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
தாமரை Vs இரட்டை இலை?
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் குறைந்தது 180 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்க வேண்டும் என எடப்பாடி திட்டமிட்டு வருகிறார். இதற்காக கூட்டணியில் உள்ள உதிரிக்கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தி வருகிறாராம். அதுபோக, டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்களையும் இரட்டை இலை சின்னத்திலேயே களமிறக்க பரிந்துரைத்துள்ளாராம். அதேநேரம்,பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்க ஜான் பாண்டியன், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சியின் ஏ.சி. சண்முகம் ஆகியோரை தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க டெல்லி தலைமை ஆர்வம் காட்டி வருகிறதாம். இதனால் கூட்டணி கட்சிகள் இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்யுமா? இல்லை தாமரை சின்னத்தை தேர்வு செய்யுமா? என்ற குழப்பமும் நிலவி வருகிறதாம்.
அதிமுக கூட்டணி - யாருக்கு எத்தனை தொகுதிகள்?
பாஜக 30 தொகுதிகள் வரை கேட்டு வரும் நிலையில், 29 தொகுதிகள் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாம். பாமகவிற்கு 18 தொகுதிகள் பேசப்பட்டுள்ளதாம். தேமுதிக கூட்டணிக்கும் வரும் என நம்பியே 7 முதல் 8 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டதாகவும், தற்போது அவர்கள் இல்லை என்பது உறுதியாகிவிட்டதால் தனக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி வருகிறாராம். இந்நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பான உத்தேச தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,
- அதிமுக - 156
- பாஜக - 30
- பாமக - 18
- அமமுக - 10
- தமிழ் மாநில காங்கிரஸ் - 4
- புதிய நீதிக் கட்சி - 2
- புரட்சி பாரதம் - 2
- தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - 2
- இந்திய ஜனநாயக கட்சி - 2
- பசும்பொன் தேசிய கழகம் - 2
- பெருந்தலைவர் மக்கள் கட்சி - 1
- அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் - 1
- தென்னிந்திய ஃபார்வர்ட் ப்ளாக் - 1
- உழவர் உழைப்பாளர் கட்சி - 1
- தமிழ் மாநில முஸ்லீம் லீக் - 1
- சிங்க தமிழர் முன்னேற்றக் கழகம் - 1





















