Kamal Haasan: விஜயை பார்க்குறது தான் எனக்கு வேலையா? - டென்ஷனான கமல்ஹாசன்!
தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட விருப்பப்படுவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் விஜய் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
பரபரப்பில் தமிழ்நாடு அரசியல் களம்
2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது . 2021 சட்டமன்ற தேர்தலை ஒப்பிடும்போது மிகப்பெரிய மாற்றங்களை அனைத்து கட்சிகளும் சந்தித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திமுக கூட்டணியில் 24 கட்சிகள் இணைந்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி தரப்பு), புரட்சி பாரதம், புதிய தமிழகம், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது. இதனைத் தவிர வழக்கம்போல நாம் தமிழர் கட்சியின் சீமான் தனித்து களம் காண்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக 234 தொகுதிகளிலும் தனியாக போட்டியிடவுள்ளது. அக்கட்சி வெற்றி என்பது ஒருபுறம் இருந்தாலும் ஏற்கனவே களத்தில் உள்ள கட்சிகளில் வாக்குகள் சிதறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக பாமகவின் ராமதாஸ் தரப்பு மற்றும் புதிதாக கட்சி தொடங்கிய சசிகலா இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர். இதனால் 5 முனை போட்டியானது நிலவுகிறது.
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்?
இதனிடையே தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட விருப்பப்படுவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் 30ம் தேதி தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் அதற்குள் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இறுதி செய்ய தமிழக வெற்றிக் கழகம் தீவிரம் காட்டி வருகிறது. விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து மக்கள் இயக்கத்தில் செயலாற்றி பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தற்போதைய மாவட்ட செயலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வேட்பாளர் தேர்வு இருக்கும் என சொல்லப்படுகிறது.
காட்டமாக பதிலளித்த கமல்ஹாசன்
இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் போட்டியிடுவதாக சொல்கிறார்கள். இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நான் ஏன் அதைப் பார்க்கணும்?- எனக்கு வேற வேலை இருக்கு” என ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலைப் போல இந்த முறையும் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நான் தேர்தல் பரப்புரை மேற்கொள்வேன். இந்த கூட்டணி என்பது நாட்டுக்கு தேவை. நான் சொல்லும்போது கிண்டல் செய்தார்கள். தொகுதியை திமுக கூட்டணி கட்சிக்கு குறைத்து வழங்குவதாக சொல்கிறார்கள். நான் இந்த கூட்டணியில் இடம்பெறுவதை கடமையாக கருதுகிறேன்” என கமல் கூறியுள்ளார்.
இதனையடுத்து ரஜினியுடன் நீங்கள் நடிக்கும் படம் எந்த நிலைமையில் இருக்கிறது என்ற கேள்விக்கு, “எனக்கு தேர்தல் வேலை இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதனை தொடங்க வேண்டும்” என பதிலளித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















