டாஸ்மாக் பணமா? தேர்தல் பணமா? ரூ. 12.42 லட்சம் சிக்கியதால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு !
விழுப்புரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 12 லட்சத்து 42 ஆயிரத்து 260 ரூபாய் பணத்தை விழுப்புரம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

விழுப்புரம்: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 12 லட்சத்து 42 ஆயிரத்து 260 ரூபாய் பணத்தை விழுப்புரம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 12 லட்சத்து 42 ஆயிரத்து 260 ரூபாய் பணத்தை விழுப்புரம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்தப் பணம் டாஸ்மாக் விற்பனைத் தொகை என ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள ராகவன்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்திச் சோதனையிட்டனர்.
அப்போது காரின் உள்ளே கட்டுக்கட்டாகப் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. காரில் இருந்தவர்களிடம் அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் குறித்து அதிகாரிகள் கேட்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததுடன், அந்த இடத்தில் முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர்.
பணத்துடன் பிடிபட்ட இருவரையும் அதிகாரிகள் விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் என்பதும், காரில் இருந்தது இரண்டு டாஸ்மாக் கடைகளில் அன்றைய தினம் வசூலான விற்பனைத் தொகை என்பதும் தெரியவந்தது.
"வழக்கமாக மதுபானக் கடைகளில் வசூலாகும் பணத்தை அன்றைய தினம் ஊழியர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று, அடுத்த நாள் வங்கியில் செலுத்துவது வழக்கம். அதன்படியே இந்தப் பணத்தை எடுத்துச் சென்றோம்," என்று ஊழியர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பணத்தை எண்ணிப் பார்த்ததில் மொத்தம் ரூ. 12,42,260 இருந்தது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அந்தப் பணத்திற்கு இணையான விற்பனை ரசீதுகள் (Bills) முழுமையாக இல்லாததாலும், தேர்தல் விதிமுறைகளின்படி அதிகப்படியான பணத்தைக் கொண்டு செல்ல அனுமதி இல்லாததாலும், வட்டாட்சியர் யுவராஜ் முன்னிலையில் பணம் ஒப்படைக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்தப் பணம் உண்மையிலேயே டாஸ்மாக் நிறுவனத்திற்குச் சொந்தமானதுதானா அல்லது வேறு ஏதேனும் தேர்தல் பயன்பாட்டிற்காகக் கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிய ஆவணங்களை டாஸ்மாக் நிர்வாகம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் மட்டுமே பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்



















