இஸ்லாமியர்களுக்கு அதிமுக செய்தது என்ன? - எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அனல் பறக்கும் பட்டியல் லிஸ்ட்
அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்காக கொண்டு வந்த திட்டங்களை பற்றி பேசினார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு என்னென்ன செய்தோம் என்று பட்டியலிட்டு கூறினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணம் செய்துவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செங்கோடு, கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு அடுத்தபடியாக ஈரோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதியில் எழுச்சியுரை மேற்கொண்டார். அன்புமணி ராமதாஸை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் இஸ்லாமியர்களுக்காக செய்த திட்டத்தை பற்றி கூறினார். அதில், “இஸ்லாமியர்களுக்கு பல நன்மைகள் செய்தோம். இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். 2001ம் ஆண்டு முதல் ரமலானுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5400 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தோம், நாகூர் தர்காவுக்கு சந்தனக் கட்டைகள் விலையில்லாமல் கொடுத்தோம், ஹஜ் புனித யாத்திரைக்கு மத்திய அரசு மானியத்தை 2018ல் நிறுத்திவிட்டாலும், மாநில அரசு சார்பில் முதலில் 6 கோடி ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டது. பின்னர் 2021ல் இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று, மானியத் தொகை 12 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது; ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்கள், மோதினார்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது; உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. வக்ஃப் வாரியத்துக்கு ஆண்டு மானியம், பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புனரமைப்பு நிதி வழங்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு நேரடி நியமன முறையில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீடிக்க அரசாணை வெளியிடப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையில் நாகூர் தர்கா குளக்கரை சேதமடைந்துவிட்டதால், அதனை சரிசெய்ய நானே நேரில் பார்வையிட்டு 4 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி சீரமைத்துக் கொடுத்தேன். சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்பட்டது;
ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமுக்கு ஆதரவு கொடுத்தது அதிமுக, எதிர்த்து ஓட்டுப்போட்டது திமுக. மறைந்த அப்துல்கலாம் நினைவாக கலை அறிவியல் கல்லூரி ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டது. திண்டுக்கல்லில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி வாழ்க்கை வரலாறு குறித்த மணி மண்டபம் அமைக்கப்பட்டது; கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. திமுக ஒன்னுமே செய்யவில்லை, கண்ணை இமை காப்பது போல் காத்த அரசு அதிமுக அரசு. தைப்பூசத்துக்கு விடுமுறை விட்டதும் அதிமுக அரசுதான். இன்னும் நிறைய இருக்குது, பேசினால் ஒன்றரை மணி நேரம் ஆகும்” என்றார்.
ட்ரெண்டிங் செய்திகள்


















