திமுகவே காங்கிரஸை தோற்கடிச்சுடும்; பாஜக தவிர வேறு எதாச்சும் ஸ்டாலினால் பேசமுடியுமா?- அன்புமணி கேள்வி
திமுகவிற்கும் காங்கிரசுக்கும் பிரச்சினை, திமுகவிற்கும் விசிகவிற்கும் பிரச்சனை, வைகோ கம்யூனிஸ்ட் உள்ளிட்டோருக்கும் பிரச்சனை உள்ளது. அதனால் காங்கிரஸ் கட்சியை திமுகவே தோற்கடித்து விடும்- அன்புமணி.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றோடு ஒன்று கருத்து வேறுபாட்டில் உள்ளன. காங்கிரஸ் கட்சியை திமுகவே தோற்கடித்து விடும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சோளிங்கர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சரவணன் மற்றும் அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை செய்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
’’ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நிற்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் 4 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார் தற்போது 5வது முறை போட்டியிடுகிறார். இந்த 20 ஆண்டுகளில் இவர் செய்தது என்ன? அவரின் ஒரே தகுதி அவர் பஸ் முதலாளி என்பது மட்டும்தான்.
திமுக ஆட்சியில் குடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஒரு டாஸ்மாக் கடையில் அந்த சாராய பாட்டில்களை பாதுகாக்க ஐந்து பேர் வேலை செய்கிறார்கள் ஆனால் பல பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கிறார்கள்.
இபிஎஸ்தான் பிரித்துக்கொடுத்த மாவட்டம்
இன்றைக்கு ராணிப்பேட்டை தனி மாவட்டமாக உருவாவதற்கு பாமக பல கட்ட போராட்டங்களை நடத்தியது. முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ்தான் இந்த மாவட்டத்தை தனியாக பிரித்துக் கொடுத்தார்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு போக வேண்டும் என்பதற்காக 7.5% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் இபிஎஸ். வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் இபிஎஸ். ஆனால் அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்தது துரோகி திமுக அரசு. இதுவெல்லாம் சாதாரண துரோகம் கிடையாது. சமூகநீதி என்றால் என்னவென்றால் திமுகவுக்கு தெரியுமா? ஆனால் திமுகவினர் வசனம் மட்டும் பேசுவார்கள்.
மோசமான ஆட்சி நீடிப்பதா?
இன்றைக்கு பள்ளி படிக்கும் சிறுவர்கள் கூட கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகக்கூடிய மோசமான சூழல் உருவாகி இருக்கிறது, அதற்கு காரணம் திமுக அரசு. அப்படி ஒரு மோசமான ஆட்சியை தமிழ்நாட்டில் நீடிக்க நீங்கள் அனுமதிக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஒரே ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை கூட திமுக அரசாங்கம் கொண்டு வரவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனியார் நிறுவனங்களில் 75% உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவய்ப்பு கொடுக்க சட்டம் கொண்டு வருவோம் என்று சொன்னார்கள், ஆனால் அதனை திமுக செய்யவில்லை.
திமுகவை விரட்டியடியுங்கள்
இரண்டு சமுதாயங்களை மோத விட்டு, பிரச்சனையை உண்டாக்கி சூழ்ச்சி செய்வதுதான் திமுக. அதில் அவர்கள் பிஹெச்டி முடித்தவர்கள். ஆனால் நம்முடைய நோக்கம் சமூக நீதி அனைத்து அடித்தட்டு மக்களும் முன்னேற வேண்டும். இன்றைய தமிழக இளைஞர்களை, இளைய தலைமுறையை போதையில் இருந்து மீட்டெடுக்க திமுகவை விரட்டியடிக்க வேண்டும்.
சோளிங்கரில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கு 20 ஆண்டுகளாக ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தீர்கள், அது போதும். இதற்கு மேலும் அவருக்கு ஓட்டு போடாதீர்கள்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றோடு ஒன்று கருத்து வேறுபாடு மோதிக் கொண்டிருக்கின்றன. திமுகவிற்கும் காங்கிரசுக்கும் பிரச்சினை, திமுகவிற்கும் விசிகவிற்கும் பிரச்சனை, வைகோ கம்யூனிஸ்ட் உள்ளிட்டோருக்கும் திமுகவுடன் பிரச்சனை உள்ளது. அதனால் காங்கிரஸ் கட்சியை திமுகவே தோற்கடித்து விடும்.
பாஜகவை சொல்லித்தான் ஓட்டு கேட்கிறார்
ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த முதலமைச்சர் தன்னுடைய சாதனைகளை சொல்லிதான் ஓட்டு கேட்க வேண்டும், மாறாக பாஜகவை சொல்லி அவர் ஓட்டு கேட்கிறார். எதை கேட்டாலும் பிஜேபி வந்துவிடும் பிஜேபி வந்துவிடும் என்று சொல்லி பேசுகிறார்கள்.. மத்தியில் பிஜேபி ஆட்சிதான் இருக்கிறது, அதனால் என்ன தவறு நடந்துவிட்டது?
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன பிறகு மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி இருப்பதால் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு நிதி கேட்டால் உடனே கிடைக்கும். ஒரே கையெழுத்தில் பிரதமர் மோடி கையெழுத்து போட்டு தமிழ்நாட்டிற்கான நிதிகளை கொடுப்பார்.
திமுகவிற்கு திறமை இல்லை, தகுதி இல்லை, நேர்மை இல்லை. அதனால் பிஜேபியை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிஜேபியை தவிர வேறு எதையாவது ஸ்டாலினால் பேச முடியுமா? திமுக ஒருவேளை வெற்றி பெற்றாலும், வாக்குறுதியில் சொல்லியுள்ள 8000 கூப்பனை தன்னுடைய கட்சிக்காரர்களுக்கும், தன்னுடைய உறவினர்களுக்கும் மட்டுமே கொடுப்பார்கள். ஆனால் இபிஎஸ் வெற்றி பெற்றால் பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாக கையில் கொடுப்பார். அதை வைத்து நம்முடைய வீட்டிற்கு தேவையான எந்த பொருளை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
நெசவாளர்களுக்கு என்று ஒரு மினி பட்ஜெட்
தமிழ்நாட்டில் நெசவாளர்கள் இன்று கடும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு என்று ஒரு தனி பட்ஜெட் போடப்படுவது போல நெசவாளர்களுக்கு என்று ஒரு மினி பட்ஜெட் ஆவது போடப்பட வேண்டும். இதுவெல்லாம் திமுகவிற்கு தெரியுமா? நெசவாளர்களின் நிலை என்ன என்று திமுகவுக்கு தெரியுமா?’’
இவ்வாறு அன்புமணி பேசினார்.





















