TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
தவெகவின் அனுமதி மனுவில் குறிப்பிட்டுள்ள முல்லை நகர் சந்திப்பானது தெருமுனை பரப்புரை நடத்துவதற்கு மட்டுமே தகுதியானது. எனவே விஜய்க்கு திட்டமிட்டு அனுமதி மறுக்கப்படவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூரில் தான் மேற்கொள்ளவிருந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கு வேண்டுமென்றே தடை ஏற்படுத்தியிருப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டிய நிலையில் அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அக்கட்சி தலைவர் விஜய் சென்னை பெரம்பூரில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
வேண்டுமென்றே தடை - விஜய் குற்றச்சாட்டு
இந்த நிலையில் விஜய் சென்னை பெரம்பூரில் தொடங்கி சென்னையில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியில் இன்று பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் ஆணையரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டதாகவும், சுவிதா செயலியில் பதிவு செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக பெரம்பூரில் பரப்புரை மேற்கொள்வதாக இருந்த இடத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் வேண்டுமென்றே குழி தோண்டி தடை ஏற்படுத்துவதாக விஜய் குற்றம்சாட்டியிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் அலுவலர் கொடுத்த விளக்கம்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, முல்லை நகர் பகுதியில் ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மாநகராட்சியால் திடீரென பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்காத சூழல் ஏற்படுத்தப்பட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.… pic.twitter.com/c4GYK6r4Oq
— Greater Chennai Corporation (@chennaicorp) March 27, 2026
இந்த நிலையில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவகர் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “விஜய் பங்குபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மார்ச் 28 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதி கோரப்பட்டது. மேலும், பரப்புரை வாகனம் பேசின் பாலத்திலிருந்து தொடங்கி முல்லை நகர் சந்திப்பு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் செய்வதற்கும். அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் கல்லூரி முதல் சர்மா நகர் வரை சாலை வழியாக சென்று, பின் வில்லிவாக்கத்தில் முடிவு பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் முல்லை நகர் சந்திப்பில் நடைபெறும் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்திற்கு சுமார் 3,000 நபர்கள் வரை கூடுவார்கள் எனவும், சுமார் 20 ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் கூறி உரிய அனுமதி வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தொடர்புடைய துறைகளிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் தவெகவின் அனுமதி மனுவில் குறிப்பிட்டுள்ள முல்லை நகர் சந்திப்பானது சென்னை மாநகர தேர்தல் நடத்தும் அலுவலரால் சிறிய அளவிலான தெருமுனைப் பரப்புரை நடத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முல்லை நகர் சந்திப்பில் தெருமுனை பிரச்சாரம் நடத்துவதற்கு பங்கு பெறுவோர்களின் எண்ணிக்கை 3000 என குறிப்பிடப்பட்டுள்ளதால் அனுமதி வழங்க பரிந்துரை செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டது. எனவே தவெக தரப்பினர் தங்களது பிரச்சாரம் நடத்த வேறு ஒரு இடத்தினை தேர்வு செய்து மனு அளித்தால் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி விளக்கம்
அதேசமயம் சென்னை மாநகராட்சி அளித்த விளக்கத்தில், “பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, முல்லை நகர் பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சியால் எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை மற்றும் புதிய பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவும் இல்லை. சென்னை குடிநீர் வாரியத்தால் குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பை சரிசெய்ய மிகக் குறுகிய பரப்பளவில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவையும் உடனடியாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மேற்கண்ட பணிகள் காரணமாக காட்டப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும்” என கூறப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்



















